பிரிட்டனில் உருவானதாகச் சொல்லப்படும் புதிய வகை கொரோனா கிருமி இதுவரை 60 நாடுகளுக்குப் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த வாரம் அக்கிருமி தொற்றியதாகவும் அது குறிப்பிட்டது.
ஏற்கெனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பரவி வரும் கொரோனா கிருமிக்கு உலகம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர்.
இச்சூழலில் புதிய வகைக் கிருமி வேகமாகப் பரவி வருவது ஆழ்ந்த கவலையை உருவாக்கி வருகிறது. தடுப்பூசி மருந்துகள் பரவலாகக் கிடைக்கும் வரை கிருமிப் பரவல் வேகத்தைக் கட்டுப்
படுத்துவதில் நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்க நாட்டில் உருவாகி இருக்கும் மற்றொரு வகைக் கிருமி பிரிட்டனின் புதிய வகைக் கிருமியைக் காட்டிலும் பன்மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என நம்பப்படுகிறது. அவ்வகைக் கிருமி 23 நாடுகளுக்கும் எல்லைப் பிரதேசங்களுக்கும் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தனது வாராந்திர தகவலறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கிருமித் தொற்று காரணமாக கடந்த ஏழு நாட்களில் உச்ச அளவாக 93,000 பேர் மாண்டுவிட்டதாகவும் 4.7 மில்லியன் பேரிடம் புதிதாக தொற்று காணப்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டியது.
தடுப்பூசி போடும் நடவடிக்கை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தீவிரமடைந்து உள்ளது. இதன் மூலம் கொள்ளைநோய் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் 70 விழுக்காட்டு பெரியோர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு வகுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று தெரிவித்தது.
இருப்பினும் ஒன்றியத்தின் பல நாடுகளும் இந்தியா, ரஷ்யா போன்ற பிற நாடுகளும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைப் பரவலாக்குவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
உலக அளவில் கிருமித்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடருகிறது.