தற்போதைய கொவிட்-19 நிலைமை, நாடாளுமன்ற அமர்வுகளின்போது அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தூர இடைவெளி நடவடிக்கைகள் ஆகியவற்றால், நாடாளுமன்றத்தில் மன்ற உறுப்பினர்களின் வருகையை கண்காணிக்க மேற்கொள்ளப்படவிருந்த முக அடையாள முறைக்கான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்றச் செயலாளர் அலுவலகம், கொவிட்-19 சூழல் உள்ளிட்ட தற்போதைய நிலைமைகள் நாடாளுமன்றத்தின் நேரடி செயல்பாடுகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டது.
எடுத்துக்காட்டாக, நாடாளுமன்ற அமர்வுகளுக்கு பாதுகாப்பான தூர இடைவெளி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இப்போது கேலரிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்கின்றனர். இது தேவையான இடங்கள், அடையாளம் காணும் சாதனங்களின் எண்ணிக்கை போன்றவற்றைப் பாதித்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, இந்த ஏலத்துக்கான திட்டத் தேவைகள், விவரக்குறிப்புகள் காலத்துக்கு ஏற்றவை அல்ல என்றும், தேவை, செலவின் மதிப்பு இரண்டுக்கும் முழுமையான பலனில்லை என்றும் நாடாளுமன்ற செயலகம் தீர்மானித்துள்ளது என அது கூறியது.
2019 நவம்பரில் அரசாங்க கொள்முதல் இணையவாசலான ஜீபிஸில் ஏலக்குத்தகை ஆவணங்களின்படி, நாடாளுமன்ற செயலகம் நேரடியான அடையாளம் காணும் முறைக்கு மாற்றாக, முக அடையாளப் பதிவு முறையை செயல்படுத்தத் திட்டமிட்டிருந்தது. இந்த ஏலக்குத்தகை விண்ணப்பத்துக்கான இறுதி நாள் 2019 டிசம்பர் 2 ஆகும்.