கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு அரணை உருவாக்கக்கூடிய ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி, முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன்னைப் போன்றவர்களுக்கும் பாதுகாப்பானது என்றும் ஆற்றல்மிக்கது என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
திரு ஹெங், கடந்த புதன்கிழமை தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் இந்தத் தடுப் பூசியைப் போட்டுக்கொண்டார்.
நிதி அமைச்சரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங், ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
திரு ஹெங், 2016 மே மாதம் அமைச்சரவை கூட்டத்தின்போது திடீரென வாதம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்துவிட்டார். சிகிச்சைக்குப் பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட்டில் அவர் பணிக்குத் திரும்பினார்.
தனக்கு வலியில்லாமல் 10 விநாடிகளுக்குள் தடுப்பூசி போட்ட இம்ரானா பானு என்ற தாதிக்கு திரு ஹெங் நன்றி கூறினார்.
இன்னும் மூன்று வாரத்தில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இப்போதைக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஊசியை ஒருவர் இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசிக்குப் பிறகு மூன்று வாரம் கழித்து இரண்டாவது ஊசி போடப்படும்.
தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஆய்வாளர்களைத் துணைப் பிரதமர் சந்தித்தார்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய பணி ஆற்றி வருவதற்காக அவர்களுக்கு திரு ஹெங் நன்றி கூறினார்.