பொருட்கள் வாங்கிய கையோடு ஆவிபறக்கும் டீ, அதற்கு அருகில் வடை என்று மாலை நேரத்தில் தேநீர் அருந்த லிட்டில் இந்தியா பக்கம் பலர் ஒதுங்குவர். இந்த மோகத்தை மெல்ல ‘பபல் டீ’ பக்கம் திருப்ப லிட்டில் இந்தியாவில் முதன்முறையாக ‘பபல் டீ’ கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
திரும்பும் இடமெல்லாம் இந்திய உணவுக் கடைகளே இருக்கும் லிட்டில் இந்தியாவில், இக்கடையைத் திறந்து வைத்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஒருவர்.
திரு மு.க. முஹம்மது ஜஃபர் அலி (41), சுமார் 12 ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் கைத்தொலைபேசி வியாபாரம் நடத்தி வருகிறார்.
இரண்டு கைத்தொலைபேசி கடைகள் வைத்திருந்த இவர், கொவிட்-19 நெருக்கடியால் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட தமது 90% வாடிக்கையாளர்களை இழந்தார்.
என்று விடிவுகாலம் வரும் என்று காத்திருக்காமல் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள முடிவெடுத்தார் ஜஃபர். புத்தாக்கச் சிந்தனையுடன் தம் இரண்டு கைத்தொலைபேசி கடைகளில் ஒன்றை, இம்மாதம் 1ஆம் தேதிமுதல் ‘பபல் டீ’ கடையாக மாற்றினார்.
‘பபல் டீ’ என்பது 1980களில் தைவானின் தைச்சுங் பகுதியில் தோன்றிய தேநீர் அடிப்படையிலான ஒரு பானம். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பான வகை தைவானில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஜப்பான், சீனா, தென்கொரியா, மலேசியா எனப் பல நாடுகளில் பிரபலமாகியுள்ளது.
பலர் இதை வாரத்தில் ஒரு முறையாவது விரும்பி அருந்தும் நிலை இன்று. பானத்தில் சேர்க்கப்படும் மரவள்ளிக்கிழங்கை வைத்து செய்யப்படும் மெல்லிய உருண்டை வடிவ ‘பெர்ல்ஸ்’ (pearls), இந்த வகை பானத்தின் சிறப்பம்சம்.
இந்த பானத்தை அனைத்து வயதினரும் விரும்பி அருந்துகின்றனர்.
லிட்டில் இந்தியாவிற்கு வரும் வழக்கமான வாடிக்கையாளர்கள் பலருக்கு ‘பபல் டீ’ பருகிய பழக்கம் இல்லை.
இவ்வாறு இருக்க, இந்த இடத்தில் ‘பபல் டீ’ கடையை எதற்காக தொடங்கினீர்கள் என்று கேட்டதற்கு, அவர் “தெரு முழுக்க இந்திய உணவுக் கடைகள்தான். நிறைய போட்டி. நானும் புதிதாக ஓர் இந்திய உணவுக் கடையை திறந்திருந்தால் அதில் புதுமை ஏதும் இருந்திராது.
“இதற்கு வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று இப்பொழுது எனக்குத் தெரியாது. சவால்கள் இருந்தாலும் களத்தில் இறங்கி எனது யோசனைகளை நடைமுறைப்படுத்தி அதன் சாத்தியத்தை சோதனை செய்து பார்ப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
“நான் என் ஊழியர்களிடமும் எப்போதும் கூறும் ஒன்று ‘மாத்தி யோசி’. அப்படி மாற்றி யோசித்து எடுத்த முடிவுதான் இந்த பபல் டீ கடை,” என்றார்.
இவர் நடத்தும் ‘பபல் டீ’ கடை, ‘இச் எ கப்’ என்னும் பபல் டீ நிறுவனத்தின் ஒரு கிளையாகும்.
வீட்டில் உள்ள தம் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் பபல் டீயை ஆசையாய் வாங்கிக் குடிப்பதைக் கவனித்ததில் இந்த யோசனை வந்ததாகக் கூறினார்.
‘சில நேரம் மனிதர்களைவிட, ஒரு குவளை தேநீர் இதமானது’ என்று எழுதப்பட்ட சுவரொட்டி ஒன்று கடை வாசலில் வைக்கப்பட்டிருக்கிறது.
இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் முதன்முறையாக இந்த பானத்தை அருந்துபவர்களாக இருப்பதாகவும் கூறினார் திரு ஜஃபர்.
கிருமித்தொற்று பாதிப்பினால் லிட்டில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தங்களது குடும்பங்களுடன் வரும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறிய திரு ஜஃபர், வியாபாரம் பெருகும் என்ற நேர்மறை சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறார்.