‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளுக்கு மறுவாழ்வு கொடுத்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இந்நிலையில், விஜய்யைத் தெய்வத்துக்கு இணையாகப் போற்றிய திரையரங்க உரிமையாளர்களே இப்போது அவருக்கு எதிராக வரிந்து கட்டுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நெருக்கமாக இருந்தவர்கள் இடையே திடீர் மனக்கசப்பு ஏற்படவும் ‘மாஸ்டர்’ படம்தான் காரணமாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்யின் உறவினர் என்று கூறப்படும் லலித்.
விஜய் சொன்ன ஒரே காரணத்துக்காக நல்ல தொகை கொடுப்பதாக இணைய வெளியீட்டு நிறுவனங்கள் தன்னை மொய்த்தபோதும் கூட திரையரங்குகளில்தான் ‘மாஸ்டர்’ வெளியாகும் என திட்டவட்டமாக அறிவித்தார் லலித்.
சுமார் எட்டு மாத காத்திருப்புக்குப் பிறகே படம் வெளியீடு கண்டது. எனினும் வசூலில் குறை வைக்கவில்லை ‘மாஸ்டர்’.
திரையரங்குகளில் ஐம்பது விழுக்காடு இருக்கைகளை மட்டுமே நிரப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது. மொத்த வசூல் 100 கோடி, 200 கோடி என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த 29ஆம் தேதி நிலவரப்படி ‘மாஸ்ட’ரின் இந்தியத் திரையரங்க வசூல் சுமார் 110 கோடி ரூபாய் என்றும் இதில் தயாரிப்புத் தரப்புக்கு மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றும் மூத்த செய்தியாளர் பிஸ்மி தெரிவிக்கிறார்.
இதையடுத்து மேலும் பத்து கோடி ரூபாய் வரை அவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்புத் தரப்பு பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
“இந்த வருத்தத்தின் பின்னணியில் தகுந்த காரணம் உள்ளது. ‘மாஸ்டர்’ படம் வெளியானதும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
“அப்படியானால் தயாரிப்புத் தரப்புக்கு உண்மையில் இதைவிட அதிக தொகை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் திரையரங்குகள் தரப்பில் உண்மையான வசூல் கணக்கு காண்பிக்கப்படவில்லை என்கிறார்கள். இதுதான் தயாரிப்பாளர் லலித் ஏமாற்றம் அடையக் காரணம்.
“இந்த நேரத்தில்தான் பிரபல தனியார் நிறுவனம் அவரை அணுகி ‘மாஸ்டர்’ படத்தை இணையத்திலும் உடனடியாக வெளியிட வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியது. விஜய் ரசிகர்கள் வெளியீடு கண்ட இரு வாரங்களுக்குள் நிச்சயம் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பதை உணர்ந்திருந்தும் அத்தனியார் நிறுவனம் கணிசமான தொகையைக் குறிப்பிட்டுள்ளது.
“இதை தயாரிப்பாளர் லலித் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு இருந்த மனநிலையில் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது முடிவு திரையரங்க உரிமையாளர்களையும் விநியோகிப்பாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது,” என்கிறார் மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணன்.
அக்குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ‘ஓடிடி’ வெளியீட்டிற்காக 15 கோடி ரூபாய் தந்துள்ளதாம். ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்துக்குப் பிறகே இணையத்தில் வெளியிட வேண்டும் என கோடம்பாக்கத்தில் விதிமுறை உள்ளது.
ஆனால் அதை மீறும் வண்ணம் படம் வெளியான இரு வாரங்களில், கடந்த ஜனவரி 29ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி உள்ளது ‘மாஸ்டர்’. இது தொடர்பில் தயாரிப்பாளர் லலித்துக்கு ஆதரவாக சிலர் பேசி வந்தாலும் அவருக்கு அடுத்தடுத்து புதுச்சிக்கல்கள் முளைக்கும் என்பதை இன்னொரு தரப்பு சுட்டிக் காட்டுகிறது.
அவர் தற்போது விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களையும் தயாரிக்கிறார். எனவே இப்படங்கள் வெளியீடு காணும் சமயத்தில் சில திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது.
“இப்படத்தைத் திரையரங்கில் வெளியிட வாய்ப்பு கிடைக்காத பகுதிகளில் இருக்கும் விஜய் ரசிகர்களும் ஓடிடி மூலம் பார்த்து ரசிக்க முடியும்,” என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
இதேபோல் உலகெங்கும் உள்ள ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க முடியும் என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விஜய்யும் கூறியுள்ளார்.
ஆனால் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் பரபரப்பாகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்திலும் இருக்கும் என்று கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கவலைப்படுகிறார்கள்.
இதற்கிடையே விஜய் இல்லாமல் ‘மாஸ்டர்’ இந்தளவு வசூலைப் பெற்றிருக்காது என்று லோகேஷ் கனகராஜ் தரப்பு தெரிவித்துள்ளது. படம் முடிந்த கையோடு விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் குறைக்க முடியவில்லை என்று அவர் விஜய்யிடம் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டாராம். விஜய் இதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லையாம்.
, :
விஜய்