பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் கடுமையாகச் சண்டை யிட்டு வரும் வேளையில் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சமாரா நகரில் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அத்தாக்குதலில் சுமார் 100 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. மோசுல் நகரை நோக்கி ஈராக்கிய சிறப்புப் படையினர் முன்னேறிச் செல்லும் வேளையில் மற்ற பகுதிகளில் போராளிகளின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
மோசுல் நகரின் தெற்கு திசையில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து பின்வாங்கிய ஐஎஸ் போராளிகள் 19 எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்ததாகவும் எரிந்துக் கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளிலிருந்து வரும் மாசினால் பல விலங்குகள் பலியானதாகவும் அங்குள்ள மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித் துள்ளார். மோசுலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் 6 எண்ணெய் கிணறுகளை ஐஎஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத் திருக்கின்றனர். ஐஎஸ் போராளிகள் அவற்றுக்கும் தீ வைக்கக்கூடுமோ என அஞ்சப்படுகிறது.
மோசுல் நகரில் சண்டை நீடிக்கும் வேளையில் அங்கிருந்து வெளியேறும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்