பெருங்கூட்டமாகக் கூட விதிக்கப்பட்டிருந்த தடையையும் மீறி மியன்மாரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்றும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் நேற்றும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததோடு வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அத்தகைய எச்சரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டுகொள்ளாமல் எதிர்ப்பு முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பினர்.
நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க வானத்தை நோக்கி போலிசார் சுட்டபோது ரப்பர் குண்டுகள் பாய்ந்து நால்வர் ரத்தம் சிந்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோதும், இன்றும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் யங்கூன் சாலைகளில் திரண்டனர்.
சுமார் 53 மில்லியன் பேர் வசிக்கும் தென்கிழக்கு நாடான மியன்மாரில் இம்மாதம் 1ஆம் தேதி ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது ராணுவம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியன்மார் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை ராணுவ ஆட்சியாளர்கள் கைது செய்தனர். அப்போது முதல் மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவ
மனைகள், பள்ளிக்கூடங்கள், அரசாங்க அலுவலகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
கிருமிப் பரவல் முறியடிப்பு நட வடிக்கைகளும் முடங்கிவிட்டன.
நான்காவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்ற போது நேபிடா நகரில் வான் நோக்கி போலிசார் துப்பாக்கியால் சுட்டதைக் கண்டதாக பலரும் ஊடகங்களிடம் கூறினர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் சிதறி ஓடியதாக ராய்ட்டர்ஸ் செய்தியிடம் ஒருவர் தெரிவித்தார். ஆயினும் துப்பாக்கியில் ரப்பர் தோட்டாக்களை மட்டும் பயன்படுத்தியதாக பின்னர் ஊடகங்களிடம் போலிசார் விளக்கினர்.
அதற்கிணங்க, ரப்பர் தோட்டா பாய்ந்த சந்தேகத்தின் பேரில் காயங்களுடன் மூவர் நேற்று நேப்பிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர் ஒருவர் கூறினார். அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வேளையில் தலைக் காயத்துடன் மற்றொருவர் அனுமதிக்கப்பட்டதாகவும் பெரிய மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவர் தெரிவித்தார். முன்னதாக, தண்ணீரைப் பீய்ச்சியடித்த போலிசாரை நோக்கி கூட்டத்தினர் கையில் கிடைத்த பொருட்களை வீசியதாக ஒரு தகவல் தெரிவித்தது.
மேலும், பீய்ச்சியடிக்கப்படும் தண்ணீர் தங்கள் மீது படாமல் இருக்க போராட்டக்காரர்கள் சிலர் பிளாஸ்டிக் விரிப்புகளால் தங்களை மூடிக்கொண்டனர்.