கலைமாமணி விருது பெற்றதை பெருமையாகக் கருதுவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
திரையுலகில் பலவற்றைச் சாதிக்க வேண்டும் எனும் ஊக்குவிப்பை இந்த விருது தமக்கு அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த 42 பேருக்கு நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி கலைமாமணி விருதுகளை வழங்கினார்.
சென்னை, கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விருதைப் பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், திரையுலகில் பெரிய கதாநாயகனாவேன் என்பது எனது கனவாக இருந்தது என்று சொன்னால் அது பொய்யாக மட்டுமே இருக்கும் என்றார்.
"இதுவரை செய்திகளில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சென்னை கோட்டைக்கு இன்று தான் வந்துள்ளேன். ஒரு குழந்தை எப்படி பிரம்மாண்டமான இடத்துக்குப் போகும் போது மிரட்சி, மகிழ்ச்சி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது.
"தமிழ்நாட்டுக் குடிமகனாக இந்தக் கோட்டையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.
"நான் சினிமாவில் இருக்க ஆசைப்பட்டேன், அவ்வளவுதான். ஆனால், கதாநாயகன் என்ற இடத்தைக் கொடுத்து நிறைய வெற்றிகளையும் தந்து இன்று கலைமாமணி என்ற மிகப்பெரிய விருதைக் கொடுத்துள்ளனர்.
"இந்த விருதுக்கேற்ப என்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த விருதினை வழங்கி இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கும் தமிழக அரசுக்கு நன்றி.
"இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும், இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று ஊக்குவிப்பது போல் உள்ளது. முக்கியமாக இந்த தருணத்தில் எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார் சிவகார்த்திகேயன்.
அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தன்னிடம் இதுபோன்ற பெரிய கேள்வி கேட்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது என்றார்.
விவசாயிகளின் போராட்டத்தைத் தாம் கவனித்து வருவதாகவும், தமது 'கனா' படத்தில் அவர்களின் பிரச்சினைகளைப் பதிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து தமக்குக் கிடைத்த விருதை தமது தாயாருக்கு அர்ப்பணிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சிவா.
"தந்தையை இழந்து நிர்க்கதியாய் நின்ற எங்களை இழுத்துப் பிடித்து கரை சேர்த்த என் தாய்க்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில் முதல்வரிடம் இருந்து விருது பெற்றது, அவ்விருதைத் தாயாரிடம் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசி பெறுவது ஆகிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.