பொதுமக்கள் குடும்ப வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதல், நிராகரிப்பு போன்ற இதர சம்பவங்கள் பற்றி புகார் கொடுக்க ஏதுவாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தனது முதலாவது 24 மணிநேர ஒருங்கிணைந்த உதவி அழைப்பு சேவையைத் தொடங்கிஉள்ளது.
வன்முறைக்கு எதிரான தேசிய உதவி அழைப்பு சேவை எனப்படும் இத்திட்டம், பல்வேறு வகையான கொடுமைப்படுத்துதல், நிராகரிப்பு சம்பவங்களுக்கு வெவ்வேறு உதவி அழைப்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரே அழைப்பு சேவையைப் பயன்படுத்த வகை செய்கிறது.
இச்சேவைக்கான அழைப்பு எண்: 1800-777-0000.
இச்சேவை 24 மணிநேரமும் ஆண்டின் 365 நாட்களும் செயல்படும். இதனால் வன்முறை மற்றும் உதவி தேவைப்படும் யாராக இருந்தாலும் எந்நேரமும் இச்சேவையைப் பயன்படுத்தலாம்.
கொடுமைப்படுத்துதல் என சந்தேகப்படும் சம்பவங்கள் பற்றி தெரிவிக்கவும் பொதுவான விசாரிப்புகளுக்கும் பொதுமக்கள், நிபுணர்கள் இந்த உதவி அழைப்பு சேவையை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிச் சேவை நிலையத்தை ‘டிஎச்எல்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளும் மாண்ட்ஃபர்ட் கேர் அமைப்பின் சமூக சேவை நிபுணர்களும் கையாளுகின்றனர்.
அவர்கள் குறிப்பிட்ட சம்பவத்தின் தீவிரத்தை ஆராய்தல், அடிப்படை உளவியல் ஆதரவு மற்றும் அழைக்கும் நபரை அவரது பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக்கூடிய அமைப்பிடம் திருப்பி விடுதல் போன்ற தனிப்பட்ட ஆதரவை வழங்குவார்கள்.
இதற்காக, ‘டிஎச்எல்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவை மற்றும் பெரியவர்கள் பாதுகாப்புச் சேவை ஆகிய பிரிவுகளில் பயிற்சி பெற்று, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு எவ்வாறு உதவி வழங்கலாம் என்று தெரிந்துகொண்டனர்.
இந்த உதவி அழைப்புச் சேவை பொதுவாக ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. தேவை ஏற்பட்டால் மாண்டரின், மலாய், தமிழ் பேசும் அதிகாரிகளும் சேவை வழங்க தயார்நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.