மும்பை: மும்பை கும்பாலா ஹில், ஆல்டாமவுண்ட் சாலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் 'அண்டிலியா ஹவுஸ்' என்ற அடுக்குமாடி மாளிகை அமைந்துள்ளது.
அந்த இல்லத்தில் இருந்து ஏறக்குறைய 500 மீட்டர் தொலைவுக்குள் ஒரு கார் இரவில் பல மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அம்பானி ஊழியர்கள் போலிசை அழைத்தனர்.
மோப்ப நாய்களுடன் போலிஸ் பட்டாளமே களத்தில் இறங்கியது.
கார் அப்புறப்படுத்தப்பட்டது. அந்தக் காருக்குள் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது அதிகாரிகள் நடத்திய பரிசோதனைகளில் தெரியவந்தது.
பல பதிவு எண் தகடுகள் இருந்தன. ஒரு மிரட்டல் கடிதமும் இருந்தது. 'இந்த முறை வெடிபொருள் வெடிக்கும்படி பொருத்தப்படவில்லை. ஆனால் அடுத்த முறை வெடிக்கும்' என அக்கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.
காரின் உள்ளே ஒருவர் பல மணி நேரம் காத்திருந்து பிறகு கீழே இறங்கி சென்றிருக்கிறார் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து அம்பானி வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல கோணங்களில் புலன்விசாரணை தொடங்கி இருக்கிறது.