நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் விதமாக, 'வோர்ல்ட் டிரீம்' சொகுசுக் கப்பலில் நோன்புப் பெருநாள் கருப்பொருளுடன் கூடிய உல்லாசப் பயணத் திட்டத்தை 'டிரீம் குரூசஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்று இரவு நீடிக்கும் இந்த மகிழ்உலா பயணம், மே 16, 23ஆம் தேதிகளில் தொடங்கும்.
'ஹலால்' முறை சமையல் தொடர்பில் பிரபல சமையல் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களும் இந்த மகிழ்உலா கப்பலில் பயணம் செய்யலாம். அனுமதிச்சீட்டின் விலை ஒருவருக்கு $179.
இதனிடையே, டிரீம் குரூசஸ் நிறுவனம், லாப நோக்கமின்றி செயல்படும் ஜாமியா சிங்கப்பூர் அமைப்புடன் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட குழு விற்பனை முன்பதிவுகள் மூலம் கிடைக்கும் தொகையில் பத்து விழுக்காட்டை அந்நிறுவனம், ஜாமியா சிங்கப்பூர் அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கும். ஜாமியா சிங்கப்பூர் அமைப்பிடம் இருந்து உதவி பெறும் பத்துக் குடும்பங்கள், மே 23ஆம் தேதி தொடங்கும் நோன்புப் பெருநாள் மகிழ்உலா கப்பல் பயணத்திற்கு வரவேற்கப்படுவர்.
"கொவிட்-19 நோய்ப் பரவலால் வேலை இழந்து, வருமானம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்கவும் அவர்களிடத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பல உதவும் கரங்கள் தேவைப்படுகின்றன," என்று ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் முகம்மது ஹஸ்பி அபு பக்கர் கூறினார்.