மும்பை: மும்பையில் உள்ள விரார் மேற்குப் பகுதியி்ல் உள்ள விஜய் வல்லபா அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 13 பேர் உடல்கருகி உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாசிக் நகரில் உள்ள இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்கில் கசிவு ஏற்பட்டு விநியோகம் நின்றுபோனதால் இரண்டு நாட்களுக்கு முன் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இப்போது அடுத்த சோகம் நிகழ்ந்துள்ளது.
பால்கர் மாவட்டம், வாசி விரார் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள விஜய் வல்லபா கொரோனா சிகிச்சை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ, தீவிரச் சிகிச்சைப் பிரிவு முழுவதும் பரவியது. அப்போது நல்ல உறக்கத்தில் இருந்த நோயாளிகள், அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியிலும், மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் கொரோனா நோயாளிகளில் 13 பேர் உயிரிழந்து விட்டனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 5 நோயாளிகளும் மற்ற 21 நோயாளிகளும் மீட்கப்பட்டு வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாடிகளைக் கொண்ட அந்த மருத்துவமனையின் மற்ற தளங்களில் மொத்தம் 90 நோயாளிகள் மற்ற நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, டுவிட்டரில் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.