சென்னை: தமிழகத்தில் இனி ஊடகத் துறையினரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் ஊடகத் துறையினருக்கும் உரிய முறையில் வழங்கப்படும் என ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஊடகத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஊடகத் துறையினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இதனால் தங்களையும் முன்களப் பணியாளர்களாகக் கருதவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின், ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
''மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.
"கடும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் பெருந்தொற்று வேளையிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்," என மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.