முன்னணி கதாநாயகிகள் முதல் அண்மையில் அறிமுகமான இளம் நாயகிகள் வரை அனைவருமே இணையத் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமன்னாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
'நவம்பர் ஸ்டோரி' என்ற தொடரில் முதன்முறையாக வில்லி வேடத்தில் நடித்திருக்கிறாராம். தைரியமான பெண் என்று பெயரெடுத்த தம்மை கொரோனா விவகாரம் தலைகீழாக மாற்றிவிட்டதாகச் சொல்கிறார் தமன்னா. இப்போதெல்லாம் வீட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சமாக உள்ளது என்கிறார்.
தமன்னா நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் 'பெட்ரோமாக்ஸ்', 'ஆக்ஷன்'. அதன்பிறகு இணையத் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் 'லெவந்த் ஹவர்' என்ற தொடர் தெலுங்கில் உருவாகி உள்ளது. அதை அடுத்து 'நவம்பர் ஸ்டோரி' என்ற நேரடி தமிழ்த் தொடரில் நடித்திருக்கிறார்.
வரும் 20ஆம் தேதி இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. இயக்குநர் ராம் சுப்ரமணியம் இயக்கியுள்ள இத்தொடரின் கதை தமக்கு மிகவும் பிடித்துப்போனதாகச் சொல்கிறார் தமன்னா.
"இயக்குநர் ராம் சுப்ரமணியன் இத்தொடரின் முதல் மூன்று பகுதிகளுக்கான கதையை விவரித்தபோது வெகுவாகக் கவரப்பட்டேன். இது எனக்கான கதை என்று அப்போதே மனதில் தோன்றியது.
"எனது கதாபாத்திரத்தின் பெயர் அனுராதா. எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்களைக் கவரும் வகையில் அழகாக அதைச் செதுக்கி உள்ளார் இயக்குநர் ராம். தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்க பெண்தான் அனுராதா. எனக்கும் அப்படிப்பட்ட இயல்புகள் உண்டு என்பதால் இந்தக் கதாபாத்திரத்தில் மனமொன்றி நடித்திருக்கிறேன்," என்கிறார் தமன்னா.
கதைப்படி தமன்னாவின் தந்தை ஓர் எழுத்தாளர். அவர் மீது திடீரென ஒரு கொலைப்பழி விழுகிறது. தன் தந்தை கொலை செய்ய அறவே வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பும் தமன்னா அவரை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் 'நவம்பர் ஸ்டோரி'யின் கதையாம்.
மொத்தம் ஏழு பகுதிகளாக இந்தத் தொடர் உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் இணையத் தொடர்களை பார்க்கும் ஆர்வம் தமக்கு இருந்ததில்லை என்று குறிப்பிடுபவர், கொரோனா ஊரடங்கின்போதுதான் அவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினாராம்.
திரையரங்கில் நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் உற்சாக கூச்சல் போட்டு, விசிலடித்து படம் பார்ப்பது தனி அனுபவம் என்று குறிப்பிடுபவர், மடிக்கணினி முன் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் சூழ்நிலை மாறிவிட்டது வருத்தம் தருவதாகச் சொல்கிறார்.
இணையத் தொடர்களுக்கான எழுத்தும் அதன் உருவாக்கமும் திரைப்படங்களுக்கான மெனக்கெடலைவிட பலமடங்கு கூடுதலானது என்று குறிப்பிடுபவர், இணையத் தொடர்களில் நடிப்பதன் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றக்கொள்ள முடிகிறது என்கிறார்.
எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் சரி, இயக்குநரே எழுத்தாளராகவும் இருந்துவிட்டால் அந்தப் படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உருவாகிறது என்று சொல்லும் தமன்னா, இது அனுபவ ரீதியில் தாம் கண்ட உண்மை என்கிறார்.
"அந்த வகையில் 'நவம்பர் ஸ்டோரி'யின் இயக்குநர் ராம் நாராயணன் நல்ல எழுத்தாளர். எனவே, தன்னுடைய கதாபாத்திரங்களை ஒரு வலைப்பின்னலுக்குள் எப்படி கொண்டுவர வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
"மேலும் ஓர் இணையத் தொடருக்கான எழுத்து எவ்வாறு இருக்கவேண்டும் எனும் சூட்சுமமும் அவருக்குப் புரிந்திருக்கிறது. அதனால்தான் அவரது தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
"சிறப்பான கதை, திறமை வாய்ந்த குழு, நல்ல இயக்குநர் அமையும் பட்சத்தில் இணையத் தொடர்களில் நடிக்க தயங்க மாட்டேன்," என்கிறார் தமன்னா.
தமக்குக் கிடைத்து வரும் நல்ல வாய்ப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக சொல்பவர், அதை முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் கொரோனா விவகாரம் மனதைப் பாதித்துள்ளதாக வருந்துகிறார். மக்கள் படும் துயரங்களை எதிர்கொள்ளும் அவலங்களைப் பார்க்கும்போது மனம் வலிப்பதாகவும் சொல்கிறார்.
திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் கொரோனாவுக்குப் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தமது நண்பர்கள் உறவினர்களில் பலரும்கூட தொற்றுக்கு ஆளாகியிருப்பது கவலை அளிப்பதாகச் சொல்கிறார்.