முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுடன் அதிக அபாயம் உள்ள சூழல்களில் வேலை செய்வோர் அவ்வப்போது கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்கு, இந்தப் பரிசோதனைகளுக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட உணவு, பான நிலையங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், உடற்தகுதி நிலையங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இம்மாதம் 21ஆம் தேதியில் இருந்து அதிகபட்சம் ஐவர், குழுவாக அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படுவர் என்பதால் ஜூலை மாதம் முதல் உணவு, பான நிலையங்களில் பணிபுரிவோர்க்குக் கட்டாய 'விரைவான, எளிதான பரிசோதனை (எஃப்இடி)' நடைமுறை தொடங்கும்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விரிவுபடுத்தப்பட்ட பரிசோதனை நடைமுறை குறித்து அறிவிக்கப்பட்டது.
ஆன்டிஜன் விரைவுச் சோதனை போன்ற 'எஃப்இடி' பரிசோதனைகளைப் பணியிடத்திலேயே செய்துகொள்ள முடியும்; கிட்டத்தட்ட 30 நிமிடங்களில் முடிவும் தெரிந்துவிடும். தடுப்பூசி போட்டிருப்பினும் போட்டிராவிடினும் ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
வரும் மாதங்களில் 'எஃப்இடி' நடைமுறை விரைந்து அதிகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பெரிய நிறுவனங்கள், அதன்பின் சிறிய நிறுவனங்கள் என அந்தப் பரிசோதனை நடைமுறை படிப்படியாகக் கட்டாயமாக்கப்படும்.
எத்தனை நாள்களுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டும், சுயமாகச் செய்துகொள்ளலாமா என்பன போன்ற இப்புதிய பரிசோதனை நடைமுறை குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சரும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கவனமாகவும் படிப்படியாகவும் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், கொரோனா பரவலையும் பெரிய அளவிலான கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகும் அபாயத்தையும் குறைக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தப் புதிய பரிசோதனை நடைமுறை இடம்பெறுவதாக அமைச்சர் வோங் கூறினார்.
அடுத்த மூன்று மாத காலத்திற்கு, இந்தப் பரிசோதனைக்கு ஆகும் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் எனக் குறிப்பிட்ட அவர், "அவ்வப்போது அனைவரும் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம் என்பதால் அரசாங்கம் இதைச் செய்கிறது. அதன்பின், தங்களது தொடர்ச்சியான திட்டமிடல்களின் ஒரு பகுதியாக பரிசோதனை நடைமுறைகளையும் ஒருங்கிணைப்பது தொடர்பில் முதலாளிகள் சிந்திக்கத் தொடங்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகள், கட்டுமானத் தளங்கள், கப்பல் பட்டறைகள், விமான நிலையம், துறைமுகங்கள், மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் உள்ளிட்ட, கிருமி தொற்றும் அபாயம் அதிகமுள்ள இடங்களில் அட்டவணைப்படி அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறை ஏற்கெனவே நடப்பில் இருந்து வருகிறது.
தங்களது அபாய நிலையைப் பொறுத்து, தடுப்பூசி போட்டிருந்தாலும் இல்லாவிடினும், அவ்விடங்களில் பணியாற்றுவோர் ஏழு அல்லது பதினான்கு நாள்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்கின்றனர்.