சிங்கப்பூர் குடியரசு விமானப் படை ஜூலை 19ஆம் தேதி வர்த்தகக் கலன் ஒன்றில் இருந்து ஊழியர் ஒருவரை மீட்டது. சிங்கப்பூர் கடற்கரையில் இருந்து ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவில் அந்தக் கலன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சிப்பந்தி திடீரென்று நினைவாற்றலை இழந்துவிட்டதாக இந்தப் படை தெரிவித்தது.
அடுத்த நாளன்று இந்தப் படையின் தேடி மீட்புக் குழு வேறு ஒரு வர்த்தகக் கலனில் இருந்த ஓர் ஊழியரையும் மீட்டு வந்தது. இவருக்கு நெஞ்சு வலி இருந்ததாக இந்தப் படை தெரிவித்தது.
இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக விமானப்படை குறிப்பிட்டது.
மீட்கப்பட்டதைக் காட்டும் இரண்டு புகைப்படங்கள் விமானப் படையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டன. அந்த இருவரும் விரைவில் குணமடைவதைக் காண தான் விரும்புவதாக ஃபேஸ்புக்கில் விமானப்படை தெரிவித்தது.
இந்தப் படை மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஏறத்தாழ இரண்டு தேடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.