லண்டன்: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தலின்றி நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் தங்களை இனி தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
தொற்று ஆபத்துக் குறைவாக உள்ள நாடுகளுக்குச் சென்றுவரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்களும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் தனிமைப்படுத்திக்கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். அதுபோல இப்போது பிரிட்டனுக்கு வரும் அமெரிக்கர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தோரும் பிரிட்டனின் இந்தப் புதிய திட்டத்தால் பயனடைவர்.
தொற்று பரவும் ஆபத்து நடுத்தரமாக உள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை பிரிட்டன் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்ற நாடுகளுக்குச் சென்று வரும் பிரிட்டிஷ் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருந்தால் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பும் பயணத்திற்குப் பின்பும் பயணிகள் கட்டாயமாக கொவிட்-19 சோதனை செய்துகொள்ளவேண்டும். இதேபோன்ற கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்காக பிரிட்டிஷ் அமைச்சர்கள் வரையறுத்து வைத்துள்ளதாக பிரிட்டனின் ஃபைனான்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில வாரங்களில், கொவிட்-19க்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளார். இப்போது வெளிநாடுகளுக்குச் சென்று வரும் பிரிட்டிஷ் மக்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டால் ஏராளமானோர் தங்கள் அண்டை நாடுகளான ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று கூறப்படுகிறது.
ஏராளமானோர் இப்போதே வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
தொற்றுக் கட்டுப்பாட்டின் ஒரு முக்கிய தளர்வாகக் கருதப்படும் இந்தத் திட்டம், கூடியவிரைவில் அதாவது அடுத்த வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தால் பிரிட்டனின் விமானப்போக்குவரத்து மற்றும் பயணத்துறை குறிப்பிடத்தக்க அளவு புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் இந்த நல்ல முடிவை அறிவித்தால் அது அமெரிக்கர்களை உற்சாகப்படுத்தும் என்றபோதிலும் கடந்த வாரம் பைடன் அரசாங்கம், தொற்று அதிகரித்துள்ளதால் இங்கிலாந்துக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி தன் மக்களைக் கேட்டுக்கொண்டது.
இப்போது பிரிட்டன், அமெரிக்கர்களுக்கு தன் எல்லையைத் திறந்துவிடப் போவதாக கூறப்படுவது குறித்து அமெரிக்கா எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
முன்னதாக லண்டனின் ஹீத்ரூ விமான நிலைய நிர்வாகமும் பிரிட்டனின் முக்கிய பயண விமானச் சேவை வழங்கும் விமான நிறுவனங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கப் பயணிகளை பிரிட்டனுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தி வந்தன.
அவ்வாறு பிரிட்டன் தனது எல்லையைத் திறக்கவில்லை எனில் இங்கு பயணத்துறையைச் சேர்ந்த பலர் வேலையிழக்கக்கூடும் என்று அவை கவலை தெரிவித்துள்ளன.
எனவே, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கான தனது எல்லையை பிரிட்டன் விரைவில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.