கடந்த ஜூலை 30ஆம் தேதி வரையிலும், எட்டு பேருந்து ஓட்டுநர் களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.
அண்மைய வாரங்களில், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த சில பேருந்து ஓட்டுநர்களுக்கு, இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அல்லது அவர்கள் வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நேற்று கூறியது.
இங்குள்ள 9,500 பேருந்து ஓட்டுநர்களில் ஒரு விழுக்காட்டுக்குக் குறைவானவர்கள்தான் தனிமைப்படுத்துதலால் பாதிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது ஆணையம் கூறியது.
மேலும், பேருந்து செயல்பாடு களுக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை என்றும் அது கூறியது.
எனினும் எத்தனை பேருந்து ஓட்டுநர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது என்றும் உறுதிசெய்யப்பட்ட தொற்றுச் சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையா என்றும் அது தெரிவிக்கவில்லை,
பேருந்து ஓட்டுநர்களில் 99 விழுக்காட்டுக்கு அதிகமானவர்கள் தங்கள் முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் ஆணையம் கூறியது.
கொரோனா தொற்றுக்குழுமங்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் இடங்களுக்கு அருகே பணிசெய்யும் தங்கள் ஊழியர்களுக்குப் பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் முன்வந்து விரைவுப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக ஆணையம் கூறியது. தொற்றுச் சம்பவங்களை விரைவாகக் கண்டறிவது அதன் நோக்கமாகும்.
"ஊழியர்களுக்கும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யப் பொதுப் போக்குவரத்து நிறுவனங் களுடன் சேர்ந்து பணியாற்றுவோம்," என்றது ஆணையம்.
அத்துடன், பொதுப் போக்கு வரத்து முனையங்களுக்கும் வாகனங்களுக்கும் மேற்கொள்ளப்படும் அன்றாடச் சுத்திகரிப்புப் பணியை பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் தொடரும் என்றும் ஆணையம் கூறியது.