போக்குவரத்துக் குழுமமான எஸ்எம்ஆர்டி இம்மாதத்தில் தனது முதல் தொகுதி மின்சார டாக்சிகளை விரைவில் சாலையில் இறக்கவுள்ளது.
சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய டாக்சி சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டி ஏறத்தாழ 1,780 டாக்சிகளைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்படும் 300 எம்ஜி 5 ரக டாக்சிகளை அந்நிறுவனம் வாங்கவிருக்கிறது.
யூரோகார்ஸ் நிறுவனம் அந்த டாக்சிகளை விநியோகித்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட $30 மில்லியனாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மின்சார டாக்சிகளுக்கு மாற ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக வாடகையை எஸ்எம்ஆர்டி குறைக்கும் என அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது. அத்துடன், கட்டணமும் அதனுடைய 'பெட்ரோல்-மின்சார' டொயோட்டா டாக்சி கட்டணத்தைவிட சற்றுக் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்கலத்தின் துணையுடன் இயங்கும் அந்த டாக்சிகள் இம்மாதப் பிற்பகுதியில் இருந்து படிப்படியாக அறிமுகப்படுத்தப்படலாம்.
ஒருமுறை மின்னூட்டம் செய்தால் எம்ஜி 5 ரக டாக்சி 400 கி.மீ. ஓடும். விரைவு மின்னூட்டி மூலம் 40 நிமிடங்களில் 80% மின்னூட்டம் செய்துவிடலாம்.
வரும் 2026ஆம் ஆண்டிற்குள் அனைத்து டாக்சிகளையும் மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்ற எஸ்எம்ஆர்டி இலக்கு கொண்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு முதல் டீசலில் இயங்கும் கார்களையும் டாக்சிகளையும் பதிவுசெய்ய முடியாது. 2040ஆம் ஆண்டு முதல் எரிபொருளில் ஓடும் கார்களுக்கும் டாக்சிகளுக்கும் தடை விதிக்கப்படும்.