கொவிட்-19 குழுமங்கள் பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் தகவல்
கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை 120 பேருந்து ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் பேருந்துச் சேவைகளின் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைப்பதை முன்னிட்டு பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுடன் ஆணையம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த 120 பேருந்து ஓட்டுநர்களும், இங்குப் பணியாற்றும் 9,500 பேருந்து ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 1.3 விழுக்காட்டினர் ஆவர்.
முதன்முதலில் பீஷான், செங்காங் பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உறுதி செய்யப்பட்டன. இவ்விரண்டும் இம்மாதம் 14ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன.
அதையடுத்து, ஏழு பேருந்து நிலையங்களில் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகிவிட்டன.
இப்போது பீஷான் கிருமிக் குழுமத்தில் 23 பேருந்து ஓட்டுநர்களும் செங்காங் குழுமத்தில் 14 ஓட்டுநர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆணையத்தின் பேச்சாளர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் இம்மாதம் 26ஆம் தேதியன்று அடையாளம் காணப்பட்டன. தோ பாயோ பேருந்து நிலையத்தின் 33 பேருந்து ஓட்டுநர்களும் பொங்கோல் பேருந்து நிலையத்தின் 13 ஓட்டுநர்களும் இக்குழுமங்களில் அடங்குவர்.
மற்ற மூன்று கிருமித்தொற்றுக் குழுமங்களும் கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்டன. கிளமெண்டி பேருந்து நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது பேருந்து ஓட்டுநர்கள், ஜூரோங் ஈஸ்ட் முனையத்தின் 15 ஓட்டுநர்கள் மற்றும் பூன் லே நிலையத்தின் 13 ஓட்டுநர்களுமே அவர்கள்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 120 பேரில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் நால்வர்.
மற்ற அனைவருக்கும் தடுப்பூசி முழுமையாகப் போடப்பட்டுவிட்டது. மேலும், அவர்களுக்குத் தொற்றுக்கான அறிகுறிகளே இல்லை, அல்லது மிதமான அறிகுறிகளே அவர்களிடம் தென்பட்டன.
இதற்கிடையே, இந்தப் பேருந்து நிலையங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மேலும் 54 கிருமித்தொற்றுச் சம்பவங்கள், ஏழு கிருமித்தொற்றுக் குழுமங்களுடன் தொடர்புடையவை என்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பொதுப் போக்குவரத்தின் முன்களப் பணியாளர்களில் 99 விழுக்காட்டினர் தங்களின் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு விட்டனர். 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்குத் தடுப்பூசி முழுமையாகப் போடப்பட்டுவிட்டது என்று பேச்சாளர் தெரிவித்தார்.
"பொதுப் போக்குவரத்து வளாகம் ஒன்றில் கிருமித்தொற்றுக் குழுமம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுத்தம் செய்யும் பணிகளும் கிருமி நீக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகள் அந்த வளாகத்தில் மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பேருந்துகள், பொது வசதிகள் அனைத்திலும் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு முதல் சுத்தம் செய்வதற்கான நடைமுறை தீவிரமாக்கப்பட்டதுடன் இந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன," என்று பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்துப் பேச்சாளர் தெரிவித்தார்.
அண்மைய நிலவரத்தால் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பணியாளர்களும் உணவு உட்கொள்வது, புகைப்பிடிப்பது போன்றவற்றைத் தனியே செய்ய வேண்டும்.
இதற்கிடையே, பேருந்து நிலையங்களில் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகி வரும் நிலை மையை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டது.