ஹனோய்: முடக்கநிலையில் நீண்ட காலமாக இருந்து வந்ததை அடுத்து வியட்னாமின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கொரோனா கிருமி தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளதாகவும் மீண்டும் செயல்பட வர்த்தகங்களை அனுமதிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் ஃபாம் மின் சின் தெரிவித்துள்ளார்.
கிருமியைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் உலகிலேயே சிறந்த நாடுகளில் ஒன்றாக ஏப்ரல் மாதம் வரை வியட்னாம் இருந்தது.
ஆனால் கிருமியல்லாத கொள்கையைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதற்குப் பதிலாக கிருமியுடன் ஒரே சூழலில் வாழும் நிலையைத் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது அது.
உற்பத்தித் துறை சார்ந்த பொருளியலாக வியட்னாம் இருக்க, கிருமிப் பரவல் மற்றும் நடமாட்டம் தொடர்பான கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் சில தொழிற்சாலைகள் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசாங்கச் சந்திப்பு கூட்டம் ஒன்றில் பிரதமர் சின், "இம்மாதம் 30ஆம் தேதி வாக்கில், பாதுகாப்புடைய இடங்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். அத்துடன் வர்த்தக, சமூக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கலாம்," என்றார்.
கொள்ளைநோய் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கொள்ளைநோய்க்கு எதிராகச் செயல்படுவதற்கு வெறும் தடுப்புகளையும் கட்டுப்பாடுகளையும் மட்டும் இடுவது ஆகாது என்றார்.
கிட்டத்தட்ட 98 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ள வியட்னாமில், தடுப்பூசித் திட்டம் துரிதமாக்கப்பட்டுள்ளது.
தினமும் 700,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் அதன் 7.61% தடுப்பூசி விகிதம், வட்டார நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது.