சிட்னி: கொவிட்-19 கிருமிப்பரவல் திடீரென அதிகரித்ததால் முடக்கப்பட்டுள்ள சிட்னி நகரை அடுத்த சில வாரங்களில் கட்டம் கட்டமாகத் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி தடுப்பூசி போட்டவர் களுக்கு போடாதவர்களைவிட அதிக சுதந்திரம் வழங்கப்படும்.
சிட்னியை தலைநகரமாகக் கொண்ட அதிக மக்கள் வசிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.
இந்நிலையில் அக்டோபர் 11க்கும் டிசம்பர் 1க்கும் இடையே தீவிரக்கட்டுப்பாடுகள் படிப்படியாக அகற்றப்படவிருக்கின்றன.
அதற்குள் 70 முதல் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இருந்தாலும் சமூக விளையாட்டு, உணவகத்தில் உண்பது, கடைத்தொகுதிகளுக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முழுமையாக தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதியில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"உலகில் உள்ள பெரும்பாலான சம்பவங்களைப்போல இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடாவிட்டால் மற்றவர் களைப் போல நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. குறைந்தது நான்கு முதல் ஆறு வாரங்களுக்குக் காத்திருக்க வேண்டும்," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளாடிஸ் பெரஜிக்லியான் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
"நீங்கள் தடுப்பூசி போடவில்லையென்றால் நண்பர்களுடன் உணவு சாப்பிட முடியாது, வீட்டிற்கு விருந்தினர்களை வரவேற்க முடியாது," என்று மேலும் அவர் தெரிவித்தார்.
ஆனால் தடுப்பூசி போடாதவர்கள் எப்படி நடவடிக்கைகளில் பங்கேற்பதை தடுக்க முடியும் என்பதை அவர் விளக்கவில்லை.