புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி நுழைய முயற்சி செய்வது உண்மைதான் என்று இந்தோ-திபெத் எல்லைப் படை (ஐடிபிபி) இயக்குநர் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார்.
நேற்று எல்லைப் படையின் மிதிவண்டி பேரணியைத் தொடக்கி வைத்த அவர், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் உன்னதப் பணியை இந்தோ-திபெத் எல்லைப் படை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"எல்லை ஒருமைப்பாட்டை நிர்வகிக்கும் பணி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பலமுறை எங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம்.
"எல்லைப் படையின் தயார் நிலை மனநிறைவை அளிக்கிறது," என்றார் சஞ்சய் அரோரா.
கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சீனா ஊடுருவ முயற்சித்தது உண்மைதான் என்றார்.
"இந்தோ-திபெத் எல்லைப் படை நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் படை. எத்தகைய ஊடுருவலாக இருந்தாலும், அதைத் தடுத்து தகுந்த பதிலடியைக் கொடுத்து வருகிறோம். கடந்த கால சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்," என்றார் சஞ்சய் அரோரா.