இம்மாதம் 13ஆம் தேதியில் இருந்து உணவங்காடி நிலையங்களில் உண்ணவும் கடைத்தொகுதிகளுக்குள் நுழையவும் அனுமதியில்லை
கொவிட்-19க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் வரும் 13ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவு, பானம் அருந்தவும் கடைத்தொகுதிகள் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்படாது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரைப் பாதுகாக்கவும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு மீதான பளுவைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொரோனா தொற்றியோரில், குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் உட்பட குறிப்பிடத்தக்க விகிதத்தினர் உணவங்காடி நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், கடைத்தொகுதிகள் போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வரும் இடங்களாக நோய்த்தொற்றியல் ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
தற்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உணவங்காடி நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகளில் அமர்ந்து உணவருந்த முடியும். ஆனால், 13ஆம் தேதி முதல் அவர்கள் உணவை வாங்கிச் செல்ல மட்டுமே முடியும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் அதிகபட்சம் இருவர் உணவு, பான நிலையங்களில் ஒன்றாய்ச் சேர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுகிறது. 12 வயதிற்குக் குறைந்த சிறார், கிருமித்தொற்றிலிருந்து மீண்டோர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதபோதும் நிகழ்ச்சிக்கு முந்திய பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றோர் அந்த இருவரில் இடம்பெறலாம்.
இந்நிலையில், 13ஆம் தேதியில் இருந்து நடப்பிற்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, இனி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே உணவங்காடி நிலையங்களில், காப்பிக் கடைகளில் அமர்ந்து உணவருந்த முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
"மேற்கண்ட தகுதிவிதிகளைப் பூர்த்தி செய்யாதவர்கள், உணவங்காடி நிலையங்கள் அல்லது காப்பிக் கடைகளில் உணவு, பானம் வாங்கிச் செல்லலாம்," என்று அமைச்சு கூறியது.
பெரிய, தனித்து அமைந்துள்ள பேரங்காடிகளுக்கு இவ்விதி பொருந்தாது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.