'வலிமை'யில் அஜித்துக்கு இரட்டை வேடங்கள், இது பைக் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகும் படம் எனப் பலவிதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால் இவை எதுவுமே உண்மையல்ல என்கிறார் இயக்குநர் வினோத்.
இன்று மக்களை அதிகம் பாதிக்கும் இரண்டு பிரச்சினைகள் குறித்து அலசுகிறது 'வலிமை'.
அவ்விரு பிரச்சினைகளும் அஜித்தின் வீட்டிலும் நுழைகின்றன. அவற்றை அவர் எப்படிச் சமாளித்து வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதையாம்.
"எனது முந்தைய இரு படங்களில் ஏற்கெனவே நடந்த பிரச்சினைகள் குறித்து அலசி இருப்பேன். எதிர்காலத்தில் என்ன மாதிரியான குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை கொஞ்சம் கற்பனை கலந்து அலசியுள்ளேன். மேலும் நான் உற்றுக் கவனிக்கும் ஒரு சமூகப் பிரச்சினை குறித்தும் விளக்கி உள்ளேன்.
"இந்தப் படத்திலும் சால்ட் அண்ட் பெப்பர் சிகையலங்காரத்துடன் திரையில் தோன்றப்போகிறார் அஜித். கதைதான் அவரை இவ்வாறு திரையில் தோன்றச் செய்கிறது.
"நம் வீட்டில் தந்தையோ, அண்ணனோ, தம்பியோ காவல்துறை அதிகாரியாக இருந்தால் எப்படி இயல்பாக இருப்பார்களோ, அப்படித்தான் அஜித்தும் இந்தப் படத்தில் வலம் வருவார்.
"மிக ஜாலியான ஒரு மனிதராக காட்சி தருபவர், ஒரு பிரச்சினை என்று வரும்போது, உடனே அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, ஆணிவேர் வரை சென்று தீர்வையும் சொல்லும் அதிரடியான செயல்பாடு கொண்ட காவல்துறை அதிகாரியாக முத்திரை பதித்துள்ளார் அஜித்," என்கிறார் இயக்குநர் வினோத்.
படம் குறித்த முக்கியமான தகவல்கள் எதையும் ஏன் வெளியிடவில்லை என்று ரசிகர்கள் கோபமடைந்ததில் நியாயம் உள்ளது என்றாலும், சூழ்நிலைதான் இதற்குக் காரணம் என்றும் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்கிறார்.
கொரோனா விவகாரத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடுபவர், மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ள மூன்று நடிகர்களும் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்த பிறகே படப்பிடிப்பில் பங்கேற்க முடியும் என்று கூறிவிட்டதாகச் சொல்கிறார்.
"தவிர, இரண்டு நடிகைகள் தாய்மை அடைந்த காரணத்தால் நிலைமை சிக்கலானது. வெளிநாடுகளில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளையும் உரிய நேரத்தில் படமாக்க முடியவில்லை.
"சிலருக்காக காத்திருப்பதா, அல்லது புதியவர்களை வைத்து மீண்டும் காட்சிகளை எடுப்பதா என்று முடிவு செய்வதே பெரிய வேலையாகிவிட்டது. காலமும் விரயமானது," என்கிறார் வினோத்.
இதில் இருசக்கர வாகன பந்தய வீரராக நடித்துள்ளாரா?
"படத்தில் மூன்று பைக் துரத்தல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொழில்முறை பந்தயங்களில் பங்கேற்காவிட்டாலும் அஜித் இன்னமும் பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது பைக்கில் நீண்டதூரப் பயணங்களும் மேற்கொள்கிறார்.
"கதைக்கு தேவைப்பட்டதால்தான் பைக் துரத்தல் காட்சிகளை வைத்துள்ளோம். அதற்காக ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் நடித்தார் அஜித்.
"இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் ரொம்பக் குறைவு," என்கிறார்் வினோத்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது பைக்கில் இருந்து கீழே விழுந்து அஜித்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டனவாம்.
இதை நினைத்து படக்குழுவினர் கவலைப்பட அஜித்தோ, பைக் பாகங்கள் உடைந்து போனதை நினைத்து வருத்தப்பட்டுள்ளார்.
"காரணம் அந்த பைக் இல்லாமல் படப்பிடிப்பை தொடர முடியாது என்ற நிலை.
"ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை. மறுநாள் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய பைக் ஒன்றை வரவழைத்துவிட்டார் அஜித்.
"உடல் முழுவதும் காயங்கள் இருந்த நிலையிலும், படப்பிடிப்பில் அவர் பங்கேற்றதைக் கண்டு மொத்தப் படக்குழுவும் நெகிழ்ந்து போனது," என்கிறார் இயக்குநர் வினோத்.
'வலிமை' வரும் ஜனவரியில் வெளியாகிறது. ஆனால் ரசிகர்கள் இந்தத் தகவலை வைத்து இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.