இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கப்பட உள்ள $130 மில்லியன் மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுத் திட்டம், செயலி வடிவத்தில் இருக்கும்.
மக்கள் கழகத்துடன் சேர்ந்து ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.
வணிகர்களும் உணவங்காடிக் கடைக்காரர்களும் இந்தப் பற்றுச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ள, சமூக மேம்பாட்டு மன்றங்கள் மற்றும் எஸ்ஜி மின்னிலக்க அலுவலகத்தைச் சேர்ந்த பற்றுச்சீட்டுத் தூதர்கள் உதவி செய்வர்.
இந்தத் திட்டத்தின்கீழ், எதிர்வரும் மாதங்களில் 1.3 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் தலா $100 பற்றுச் சீட்டுகளைப் பெறவிருக்கின்றன.
'ரிடீம்எஸ்ஜி மெர்சண்ட்' என்று அழைக்கப்படும் இந்தச் செயலி, வீடமைப்புப் பேட்டைகளின் வர்த்தகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்களிடம் வழங்கப்படும் அரசாங்க மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்.
மேலும் பற்றுச்சீட்டுப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல், பற்றுச்சீட்டுகளை ரொக்கமாக வர்த்தகர்களுக்கு விரைவாக மாற்றிவிடுதல் ஆகியவற்றையும் செயலியால் மேற்கொள்ளமுடியும் என்று சமூக மேம்பாட்டு மன்றங்கள் கூறின.
வீடமைப்புப் பேட்டைகளின் வர்த்தகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள் ஆகியோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க நேற்று முதல் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் சமூக மேம்பாட்டு மன்றத் தூதர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களை அழைத்து செயலியைப் பயன்படுத்தும் விதத்தைச் சொல்லிக்கொடுப்பார்கள்.
"இந்த சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டம் வர்த்தகர்கள் அளித்த பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காகி தத்தால் ஆன பற்றுச்சீட்டுகளைச் சேகரித்து அவற்றை ரொக்கமாக்குவது கூடுதல் சுமையைத் தருகிறது என்று அவர்கள் கூறினர்," என்றார் மேயர்கள் குழுவின் தலைவரும் வர்த்தக தொழில் துணை அமைச்சருமான லோ யென் லிங்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் அறிமுகம் கண்டன. அரசாங்க உதவித் திட்டங்கள் மூலம் 400,000 குறைந்த வருமானக் குடும்பங்கள் இதற்கு அடையாளம் காணப்பட்டன.
உள்ளூர் கடைகளில் செலவழிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் $50 காகிதப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.