நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள் களாக கனமழை பெய்து வந்ததால் 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவா்களுக்குத் தேவையான உணவும் இதர அடிப்படை வசதி களும் செய்து தரப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உள்ள பள்ளி களுக்கு ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று விடுமுறை அறிவித்தார்.
கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனா். மழை வெள்ளம் இழுத்துச்சென்ற ஒருவரைத் தேடும் பணியும் தொடர்கிறது.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் நேற்று மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடர்வதாக 'புதிய தலை முறை' தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
குமரி மாவட்டத்தின் பல இடங்களிலும் வெள்ளநீரில் சாலைகள் மூழ்கியிருந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு போன்றவற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தற்போது குறையத் தொடங்கியுள்ளதால் தாழ்வான பகுதிகள், குடியிருப்புகள், விளை நிலங்களில் தேங்கிய நீர் வடியத் தொடங்கியுள்ளது.
இனி வரும் நாள்களிலும் மழை பெய்வது தொடர்ந்தால் அதை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வழி அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் கன மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.