இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் இப்போது எட்டு அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து 10 அணிகள் பங்கேற்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் கழகம் (பிசிசிஐ) ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அந்த அணிகளை வாங்குவதற்கான ஏலக்குத்தகை ஆவணங்களையும் அது வெளியிட்டு உள்ளது.
ஓர் அணியின் தொடக்க விலை ரூபாய் 2,000 கோடி என பிசிசிஐ நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அணிகளை வாங்கு வதற்கான ஏலத்தொகையைத் தாக்கல் செய்ய முதலில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த அவகாசம் பின்னர் அக்டோபர் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது தடவையாக கால அவகாசத்தை நீட்டித்த பிசிசிஐ, ஏலத்தொகையைத் தாக்கல் செய்ய அக்டோபர் 20ஆம் தேதியே கடைசிநாள் என அறிவித்தது.
இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற காற்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான அமெரிக்காவைச் சேர்ந்த கிளாசர் குடும்பம், ஐபிஎல் அணி ஒன்றை வாங்க ஆர்வம் காட்டி உள்ளதாகவும் அதன்பொருட்டே ஏலக்குத்தகை தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அணிகளை வாங்குவதற்கான ஏலக்குத்தகை தாக்கல் கடைசி தேதி முடிவடைந்துவிட்ட நிலையில், ஆவணத்தை வாங்கியவர்கள் ஏலத்தொகையை 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வர் என்றும் அடுத்த நாள் ஏலத்தில் வென்றவர்கள் விவரம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமம், டோரண்ட் பார்மா, அரபிந்தோ பார்மா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பல்வேறு நிறுவனங்கள் புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள் ஐபிஎல் அணியை வாங்கலாம். அவர்கள் ஏலத்தில் வெற்றிபெற்றால் இந்தியாவில் நிறு வனத்தை நிறுவ வேண்டும்.