மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று போட்டி ஒன்றில் நேற்று முன்தினம் பின்னிரவு இத்தாலியின் அட்டலாண்டா குழுவுடன் மோதிய மான்செஸ்டர் யுனைடெட் 0-2 என்று முதல் பாதி ஆட்ட இறுதியில் பின்தங்கியது.
பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் முனைப்புடன் விளையாடிய யுனைடெட் அணி இறுதியில் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் யுனைடெட்டின் வெற்றிக் கோலை அதன் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டு வெற்றிக்கு வழிவகுத்தார்.
சென்ற சனிக்கிழமை இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் லெஸ்டர் குழுவிடம் 4-2 எனத் தோல்வியைத் தழுவிய யுனைடெட் முதல் பாதி ஆட்ட முடிவில் இரண்டு கோல்கள் விட்டுக்கொடுத்து பின்தங்கியபோது அதன் ரசிகர்கள் கேலிக்கூச்சல் போட்டதாகவும் குழுவின் நிர்வாகியான ஒலே குனார் சோல்சியாருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டதாகவும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
அட்டலாண்டா குழுவின் முதல் கோலை ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் மரியோ பசலிச் போட்டார். பின்னர் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் அட்டலாண்டாவின் டெமிரேல், கார்னர் வாய்ப்பின் மூலம் வந்த பந்தை தலையால் முட்டி அட்டலாண்டா 2-0 என முன்னிலை பெற உதவினார்.
இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றவும் யுனைடெட்டின் வேகத்தை அதிகரிக்கவும் பால் பொக்பா, ஜாடோன் சாஞ்சோ, எடின்சன் கவானி ஆகியோரை சோல்சியார் களமிறக்கினார்.
ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் சக விளையாட்டாளரான புருனோ ஃபெர்னாண்டஸ் கொடுத்த பந்தை திடலின் இடதுபக்கமாக வந்த இங்கிலாந்தின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், மிக லாவகமாக அட்டலாண்டா வலைக்குள் புகுத்தி யுனைடெட்டுக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார். அதே வேகத்தில் தொடர்ந்து விளையாடிய யுனைடெட், ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் மீண்டும் புருனோ ஃபெர்னாண்டஸ் கொடுத்த பந்தை யுனைடெட் அணியின் தலைவர் ஹேரி மெக்குவையர் கோல் வலைக்குள் செலுத்தினார்.
ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் லுக் ஷா கொடுத்த பந்தைச் சரியான தருணம் பார்த்து எம்பிக் குதித்த ரொனால்டோ தலையால் முட்டி கோலாக்கினார்.
பல முறை தமது விளையாட்டு சாகசத்தால் மான்செஸ்டர் யுனைடெட்டைக் காப்பாற்றிய ரொனால்டோ இம்முறையும் அதை செய்யத் தவறவில்லை என காற்பந்து விமர்சகர்கள் புகழ்மாலை சூட்டுகின்றனர்.
இவரது கோல் பற்றி கூறும் யுனைடெட் அணியின் தலைவர் மெக்குவயர், "அவர் எம்பிக் குதித்த விதம், பந்து வருவதைப் பார்த்து அவர் எம்பிய தருணம், பந்தை கோல் வலையின் மூலையில் செலுத்திய எல்லாமே கனகச்சிதம் என புகழாரம் சூட்டியுள்ளார்.