அடுத்த ஆண்டு 'எஃப்-1' கார் பந்தயத்தை தொடர்ந்து நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக போக்கு வரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் இரவு கார் பந்தயப் போட்டி கொவிட்-19 காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2017ல் போட்டியை நீட்டிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் கடைசிப் போட்டி இவ்வாண்டு நடைபெறுவதாக இருந்தது.
செய்தியாளர் கூட்டத்தில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், புதிய ஒப்பந்தம் குறித்து சிங்கப்பூர் ஃபார்முலா ஒன் ஏற்பாட்டாளர்களும் ஃபார்முலா ஒன் நிர்வாகத் தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர் என்றார்.
கொவிட்-19 காரணமாக 'எஃப்-1' கார் பந்தயம் உட்பட பல நிகழ்வுகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டதால் சிங்கப்பூரின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் உலக அளவில் முத்திரை பதிக்கவும் பொருளியல் நன்மைகளுக்கும் எஃப்-1 போன்ற நிகழ்வுகள் சிங்கப்பூரில் நடத்தப்படவேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.