அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே தீர்வு காணப்படும் என பிரதமர் லீ நம்பிக்கை
4ஜி குழுவினர் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மேலும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
இருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே அவர்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடுவார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் கூறினார்.
மக்கள் செயல் கட்சி மாநாட்டில் பேசிய கட்சியின் தலைமைச் செயலாளரான திரு லீ, 4ஜி குழுவினர் குறித்த நேரத்தில் விவேகமிக்க முடிவு எடுப்பார்கள் என்பதும் நல்ல கரங்களில் ஆட்சியைப் ஒப்படைக்க தன்னால் முடியும் என்பதும் நிச்சயம் என்று தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலை 2025 நவம்பருக்கு முன்பாக நடத்த வேண்டும். 4ஜி தலைவர்களுக்கு கொவிட்-19 கடுமையான ஒரு சோதனையாக இருக்கிறது.
தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் அவர்களின் உறுதிக்கு சோதனை வந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு லீ, கொவிட்-19 சூழ்நிலையைத் திறம்பட சமாளிக்கும் பேரும் புகழும் 4ஜி முழு குழுவையே சாரும் என்று தெரிவித்தார்.
"அந்தக் குழுவை சிங்கப்பூர் சார்ந்திருக்க முடியும். சாதகமான நேரத்திலும் பாதகமான நேரத்திலும் அதை சிங்கப்பூர் நம்ப முடியும்," என்று பலத்த கரவொலிக்கு மத்தியில் திரு லீ குறிப்பிட்டார்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் 4ஜி தலைவர்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் திரு லீ கேட்டுக்கொண்டார்.
கட்சியில் தலைமைத்துவப் புதுப்பிப்புப் பிரச்சினை பற்றி திரு லீ பேசினார். பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து எதிர்கால தேர்தல்களில் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்தும் அவர் உரையாற்றினார். உறுப்பினர் சேர்ப்பு நடைமுறையைக் கட்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றாரவர்.
புதுப்பிப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்களுக்கு மட்டுமல்லாமல் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் தேவைப்படுவதாக இருக்கிறது என்று திரு லீ கூறினார்.
அரசியல் வாரிசு தொடர்பான தனது திட்டங்கள் கொவிட்-19 காரணமாக தாமதமடைந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
4ஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அந்தப் பொறுப்பில் இருந்து தான் விலகிக்கொள்வதாக ஏப்ரலில் அறிவித்தார்.
துணைப் பிரதமர் என்ற முறையில் திரு ஹெங், 4ஜி குழுவின் முக்கிய உறுப்பினராகத் தொடர்ந்து இருந்து கடும் பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாக திரு லீ கூறினார். திரு ஹெங் விலகிக்கொண்டதை அடுத்து அரசியல் வாரிசுப் பிரச்சினையை 4ஜி அமைச்சர்கள் மீண்டும் ஆராய்ந்து இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.