'விடிஎல்' பயணப் பதிவு உறுதி செய்யப்பட்டவர்கள் புதிய அறிவிப்பால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விடிஎல் பயணத்துக்கு உறுதி செய்யப்பட்ட பயணிகள் தங்களது பயணத்தைத் தொடரலாம் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று கூறியது.
பயண மாறுதல் முன்பதிவை உறுதி செய்த பயணிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அது தெரிவித்தது.
"சிங்கப்பூர் வழியாக விடிஎல் விமானங்களுக்குப் பதிவு செய்தவர்கள், பயணச்சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கான விமானத்திற்குப் பதிவு செய்துகொள்ளலாம்," என்று சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
சிங்கப்பூர் வருவதற்கான விடிஎல் பயணத்துக்கான அனைத்து புதிய விமானப் பயணப் பதிவு
களையும் புதன்கிழமை இரவு 11.59 மணி முதல் நிறுத்தப்போவதாகவும் 2022 ஜனவரி 20ஆம் தேதி வரையிலான எந்தவொரு பயணத்துக்கும் பயணப்பதிவை ஏற்கப்போவதில்லை என்றும் அது குறிப்பிட்டது.
ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் விடிஎல் பயணத்துக்கான கட்டுப்பாடுகளைப் பின்பற்றியிருந்தால் தனிமை உத்தரவை நிறைவேற்றாமல் சிங்கப்பூருக்கு வரலாம் என அது மேலும் கூறியது.
சிங்கப்பூர் ஏர்லைன்சும் அதன் துணை நிறுவனமான ஸ்கூட்டும் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விடிஎல் விமானங்களை இயக்கி வருகிறது. இந்தியா, மலேசியா, இந்தோனீசியா, தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சில ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றுக்கான விமானங்கள் அவை.
இந்நிலையில் ஜெட்ஸ்டார் விமான நிறுவனமும் ஏற்கெனவே பதிவு செய்த தனது விடிஎல் பயணிகள் தனிமை உத்தரவை நிறைவேற்றாமல் சிங்கப்பூருக்கு வரலாம் என்று கூறியுள்ளது.
பொது பயணச்சீட்டுக்கான தேவை அதிகரிப்பு
இதற்கிடையே, விடிஎல் பயணச்சீட்டுகள் நிறுத்தப்படுவதால் பொதுவான விமானப் பயணச்சீட்டுகளுக்கான தேவை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
புதிய அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று பயணச்சீட்டுகளின் விற்பனை 80 விழுக்காடு அதிகரித்ததாக சரவணா டிராவல்ஸ் பயண நிறுவனத்தின் தலைவர் சண்முகவேல் நாகய்யயா சரவணன், 38, தெரிவித்தார்.
பயணச்சீட்டுகளின் விலையும் ஏறிவிட்டதாக சிராங்கூன் டிராவல்ஸ் நிறுவனத்தின் முகம்மது இக்பால் கூறினார். விமானப் பயணத்துக்கான மிதமிஞ்சிய தேவை ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
கூடுதல் செய்தி:
கி.ஜனார்த்தனன்