'இந்தியாவில் தொற்று கூடினாலும் சென்ற ஆண்டு அளவுக்கு மரணங்கள் இல்லை'
புதுடெல்லி: இந்தியாவில் அன்றாடம் புதிய கொவிட்-19 தொற்று கிடுகிடுவென கூடி வருகிறது. என்றாலும் அந்தத் தொற்று காரணமாக ஏற்படக்கூடிய மரணம் உள்ளிட்ட பாதிப்புகள் சென்ற ஆண்டு டெல்டா கிருமி தாண்டவமாடியபோது இடம்பெற்ற அளவுக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதற்கு நாட்டின் அதிதீவிர தடுப்பூசி திட்டமே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தியாவில் டெல்டா கிருமி தலைவிரித்தாடியபோது, சென்ற ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி 386,452 பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர். 3,059 பேர் உயிர்இழந்தனர். 3.170 மில்லியன் பேர் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் அப்போது தடுப்பூசி செலுத்தியவர்களின் அளவு வெறும் 2 விழுக்காடுதான்.
அதேவேளையில், இந்த மாதம் 20ஆம் தேதி நிலவரப்படி, 317,532 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டது. ஆனால் உயிரிழந்தவர்கள் வெறும் 380 பேர்தான். அதே போல சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கையும் 1.92 மில்லியனாக இருந்தது. இப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் அளவு 72% ஆக இருக்கிறது.
ஆகையால் மரணத்தை பெரிய அளவில் தடுப்பூசி தடுத்து இருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்றுக் காலை 8 மணிக்கு முந்தைய 24 மணி நேரத்தில், புதிதாக 347,254 பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த எண்ணிக்கை கடந்த 235 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்று அது கூறியது.
மொத்தம் 9,692 பேர் ஓமிக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக 703 பேர் மரணமடைந்தனர். மொத்த மரண எண்ணிக்கை 488,396 ஆகியது.
இவ்வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டதை அடுத்து நாட்டில் மொத்தம் 1600.43 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கின்றன என்று சுகாதார, குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதனிடையே, ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர், இன்று முதல் தொற்று இல்லை என்றாலும் ஏழு நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இந்தியா வரும் பயணிகள் தங்களுக்குத் தொற்று இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் அது கூறியது.
இவ்வேளையில், டெல்லியில் வார இறுதி நாள்களில் நடப்பில் உள்ள ஊரடங்கைத் தளர்த்த முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறின.