சென்னை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 125 படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள 125 தமிழகப் படகு உரிமையாளர்களுக்கு ரூ.5 கோடியே 66 லட்சம் நிதி வழங்கப்படும். 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும் 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.150,000 வீதமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்த மீனவச் சங்கப் பிரதிநிதிகள், மீனவர்களுக்கு இலங்கையால் ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர். மீனவர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.