லக்னோ: குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடுமையாக்கி உள்ளது. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் குற்றப்பின்னணி கொண்ட அரசியல் பிரமுகர்கள் தங்கள் வாரிசுகளை களமிறக்குகின்றனர்.
அம்மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக இதுவரை அறிவித்துள்ள 109 வேட்பாளர்களில் 37 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் நான்கு வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி அறிவித்த வேட்பாளர்களில், 20 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் ஆவர். இதே போல் மற்ற கட்சிகளும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களைக் களமிறக்கி வந்த நிலையில், தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளை எதிர்நோக்கும் பிரமுகர்கள் பலர் தங்களுக்குப் பதிலாக வாரிசுகளையும் உறவினர்கள் அல்லது விசுவாசிகளையும் தேர்தலில் போட்டியிட வைக்கின்றனர். கட்சித் தலைமையை சமாதானப்படுத்தி தொகுதிகளைக் கேட்டுப் பெறும் அரசியல் பிரமுகர்கள் பிரசாரத்துக்குச் செல்வதையும் கூட தவிர்ப்பதாக கூறப்படுகிறது.