சாடா: ஏமன் தடுப்பு முகாம் மீது சவூதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பேர் மாண்டுவிட்டனர்.
ஹுதி படையின் சுகாதார அமைச்சர் தாஹா அல்-மோட்டவாகல் இதனை உறுதிப்படுத்தினார்.
ஆப்பிரிக்க அகதிகள் உட்பட பலர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
ஹெடைடாவில் நடந்த தாக்குதலில் மூன்று பிள்ளைகள் மாண்டுவிட்டதாக 'சேவ் தி சில்ரன்' அமைப்பு கூறியது.
பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி வான்வழித் தாக்குதலால் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு ஐநா சபை தலைமைச் செயலாளர் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தெற்குப் பகுதியில் உள்ள ஹொடைடாவில் இருக்கும் தொலைத்தொடர்பு மையத்தின் மீது கூட்டுப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில், ஏமன் முழுவதும் இணையச் சேவை முடங்கியது," என குட்டரெஸின் செய்தித் தொடர்பாளரான டுஜரிச் சொன்னார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக உடனடி, வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், மோதல்கள் பெருங் கவலை அளிப்பதாகக் கூறினார். அத்துடன் மோதலைத் தணிக்க அனைத்து தரப்புகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, சவூதி கூட்டுப்படை ஏமன் தடுப்பு முகாமை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்று சவூதியின் அதிகாரபூர்வ ஊடகமான எஸ்பிஏ கூறியுள்ளது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைநகரமான அபுதாபி மீது ஹுதி கிளர்ச்சிப் படையினர் ஆளில்லா விமானங்கள் மூலம் சென்ற திங்கட்கிழமை தாக்குதல் நடத்தினர்.
அதன் பிறகு, ஹுதி கிளர்ச்சி இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏமனில் உள்ள இலக்குகள் மீது சவூதி கூட்டுப்படை தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.