விஜயவாடா: மருந்தாக்கத் துறையில் பயிலும் மாணவர்களைக் கொண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முயன்றபோது, கடுமையான இரத்தப்போக்கால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
நெல்லூர் நகரில் கடந்த வியாழனன்று இச்சம்பவம் நிகழ்ந்தது. யூடியூப் காணொளியைக் கண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் மாமன் மகளை மணமுடித்த அந்த 28 வயது ஆடவர், அதற்கு மறுஆண்டே மணவிலக்கு பெற்று, தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் அவருக்குப் பழக்கமானார். அதன்பின், வாட்ஸ்அப் வாயிலாக மஸ்தான், ஜீவா என்ற இளநிலை மருந்தாக்கப் படிப்பு பயிலும் மாணவர்களுடன் அவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது.
அவர்களிடம் தான் மும்பை சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புவதாக அந்த ஆடவர் தெரிவித்தார். அதனைக் கேட்ட அம்மாணவர்கள் இருவரும் 'தங்களுக்கு அந்த அறுவை சிகிச்சை முறை தெரியும்' என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து, நெல்லூரில் ஒரு ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து, அங்கு அவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் காவல்துறை கூறியது. அப்போது, மயக்க மருந்து அதிகமாகக் கொடுத்ததாலும் மிகுதியான இரத்தப்போக்காலும் அந்த ஆடவர் அந்த அறையிலேயே இறந்துவிட்டார். அதைக் கண்டதும் அம்மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
பின்னர் ஹோட்டல் ஊழியர் ஒருவர் அந்த ஆடவரின் சடலத்தைக் கண்டு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.