மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவின் தலைவராக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, திரு லாரன்ஸ் வோங் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க வழிவகுக்கப்பட்டு இருக்கிறது.
நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவின் தலைவராக திரு லாரன்ஸ் வோங்கைத் தேர்வுசெய்துள்ளதை அமைச்சர்கள் நேற்று உறுதிப்படுத்தினர் என்று பிரதமர் லீ சியன் லூங் ஓர் அறிக்கையின் வழியாகத் தெரிவித்தார்.
"ஆலோசனைக்குப் பிறகு, நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவின் தலைவர் பதவிக்குத் தங்களின் தெரிவு அமைச்சர் லாரன்ஸ் வோங் என்பதை அமைச்சர்கள் இன்று (நேற்று) உறுதிப்படுத்தினர். இன்று (நேற்று) மாலை இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில், மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்," என்று பிரதமர் லீ தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் மசெகவின் 4ஆம் தலைமுறைத் தலைவர்கள் குழுவின் தலைவர் பதவியில் இருந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் விலகினார்.
இதனையடுத்து, தங்களது குழுவின் அடுத்த தலைவர் தொடர்பில் கருத்திணக்கத்தை எட்ட நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழு கால அவகாசம் கேட்டது என்றும் அப்போது அவர்கள் கொவிட்-19 பரவலை எதிர்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது என்றும் திரு லீ விளக்கினார்.
அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த பிறகு, மசெக 4ஆம் தலைமுறைக் குழுவின் தலைவரைத் தேர்வுசெய்வது தொடர்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு செயல்முறையைத் தொடங்கும்படி முன்னாள் அமைச்சரும் மசெக தலைவருமான கோ பூன் வானிடம் பிரதமர் லீ கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்த திரு கோ, அவர்களின் தனிப்பட்ட கருத்தைக் கேட்டறிந்து, அவற்றின் ரகசியம் காத்து, 4ஆம் தலைமுறைக் குழுவின் தலைவர் தொடர்பில் கருத்திணக்கத்தை எட்ட வழிவகுத்தார். இவ்விவகாரத்தில், பிரதமர் மற்றும் இரு மூத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை.
தாம் ஆலோசித்தவர்களில் பெரும்பாலோர், 4ஆம் தலைமுறைக் குழுவின் அடுத்த தலைவராக அமைச்சர் வோங்கிற்கு ஆதரவு அளிப்பதை திரு கோ கண்டறிந்தார்.
தமது முடிவுகளை அமைச்சர்கள், மன்ற நாயகர், என்டியுசி தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் திரு கோ முன்னதாக நேற்று விளக்கினார். அதனையடுத்து, 4ஆம் தலைமுறைக் குழுவின் தலைவராக அமைச்சர் வோங் தேர்வுசெய்யப்படும் முடிவிற்கு அவர்கள் அனைவரும் உடன்பட்டனர். பின்னர் நேற்று மாலையில் இடம்பெற்ற மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அம்முடிவு அறிவிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
இம்முடிவை அடுத்து, பிரதமர் லீ அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்வார். அம்மாற்றங்கள் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
"அடுத்த தலைமைத்துவம் தொடர்பிலான இம்முடிவு சிங்கப்பூருக்கு மிக முக்கியமானது. நமது அரசமைப்பின் சிறப்பம்சங்களாக விளங்கும் தலைமைத்துவத் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் இது உறுதிப்படுத்தும். வழிநடத்திச் செல்லும் உரிமையை மரபுரிமையாகப் பெற முடியாது என்பதை அமைச்சர்கள் அங்கீகரித்துள்ளனர். தங்களால் முடிந்த அளவு சிங்கப்பூரர்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றுவதை திரு லாரன்ஸ் வோங்கும் அவரது இளம் குழுவினரும் தொடர்ந்து, அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் நியாயப்படுத்துவர்," என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
'சிங்கப்பூரர்களுக்கு முழுமனத்துடன் சேவையாற்றுவதைத் தொடர்வேன்'
நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவுடன் இணைந்து, சிங்கப்பூரர்களுக்கு முழுமனத்துடன் சேவையாற்றுவதைத் தொடர்வேன் என்றும் சக சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற கடுமையாக முயல்வேன் என்றும் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், 2021 மே மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2011 பொதுத் தேர்தல் மூலம் அரசியலில் அடி எடுத்து வைக்குமுன் இவர் மூத்த அரசாங்க அதிகாரியாக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரானபின், தற்காப்பு, கல்வி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின் கலாசார, சமூக, இளையர்துறை இடைக்கால அமைச்சராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2014 மே மாதம் முழு அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். 2015ல் தேசிய வளர்ச்சி அமைச்சராகவும் 2016ல் நிதி 2ஆம் அமைச்சராகவும் பொறுப்பேற்ற இவர், 2020 பொதுத் தேர்தலுக்குப்பின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சக அமைச்சர்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவிற்கும் தாம் தலைவணங்குவதாகவும் நன்றிக்கடன்பட்டுள்ளதாகவும் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக அமைச்சர் வோங் தெரிவித்துள்ளார்.
"1959ஆம் ஆண்டிலிருந்து, நமது அரசியல் தலைமைத்துவ முறையானது ஒருபோதும் ஒருவரை மையப்படுத்தி இல்லாமல், ஒரு குழுவை மையப்படுத்தியே இருந்து வருகிறது. நம்மில் ஒவ்வொருவரும் பங்களித்து, ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுத்து, சிங்கப்பூருக்கு நம்மால் முடிந்த அளவிற்குச் சிறப்பாகப் பணி ஆற்றி வருகிறோம்.
'கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நான்காம் தலைமைத் துவக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தோளோடு தோளாக நின்று வருகிறோம். கடந்த ஈராண்டு அனுபவம் எங்களது பிணைப்பை உறுதிப்படுத்தி, இந்த நெருக்கடியில் இருந்தும் அதன்பின்னும் சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லவேண்டும் எனும் மனவுறுதியை வலுப்படுத்தி இருக்கிறது," என்று திரு வோங் கூறியுள்ளார்.