டொங்ஜியோசாடோ: கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியக் கடற் பகுதியில் மூழ்கிய அந்நாட்டைச் சேர்ந்த செவோல் (படம்) என்று அழைக்கப்பட்ட கப்பல் நேற்று கடலின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதியன்று அந்தக் கப்பல் மூழ்கியதில் 304 பேர் உயிரிழந்தனர். மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அப்போதைய தென்கொரிய அதிபரான பார்க் குயூன் ஹேவுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.
அந்த 6,825 டன் எடை கொண்ட கப்பல் நேற்று கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்படும் காட்சி அந்நாட்டு தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளாகக் கடலுக்கு அடியில் இருந்த காரணத்தினால் கப்பல் துருப்பிடித் திருந்தது. கப்பல் மூழ்கிய இடத்தில் இரு பக்கங்களிலும் அகன்ற தளமேடை அமைத்து அவற்றிலுள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தி கப்பலை மேலே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.