ஹனோய்: சக நாட்டவரும் நடப்பு வெற்றியாளருமான கிரியா திகானா அப்துல் ரகுமானை 12-11 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிகொண்டு, மகளிர் வாட்சண்டை 'எபே' தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் 14 வயதேயான சிங்கப்பூரர் எல்லி கோ.
வியட்னாமில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் ஆக இளம் சிங்கப்பூர் விளையாட்டாளர்களில் ஒருவரான எல்லி, முதல் முயற்சியிலேயே தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
31வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்குக் கிட்டிய இரண்டாவது தங்கப் பதக்கம் இது.
முன்னதாக நடந்த அரை இறுதிப் போட்டிகளில், எல்லி 15-14 என்ற புள்ளிக் கணக்கில் வியட்னாமின் வு தி ஹாங்கையும், கிரியா 15-12 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் தனீ கொராவனையும் வீழ்த்தினர்.
1989ஆம் ஆண்டிற்குப்பின் தனி நபர் வாட்சண்டையில் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் என்ற சாதனையைக் கடந்த 2019ல் படைத்திருந்தார் 21 வயதான கிரியா.
ஆண்களுக்கான 'சேபர்' பிரிவு காலிறுதியில், சிங்கப்பூரின் சான் ஃபு சியன் 15-12 என்ற புள்ளிக் கணக்கில் சக நாட்டவரான சோய் யு யோங்கைத் தோற்கடித்தார்.
ஆனால், பிற்பகலில் நடந்த அரையிறுதியில் சான் 8-15 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்து வீரரிடம் தோற்றுப்போனதால் அவருக்கு வெண்கலமே கிட்டியது.
முன்னதாக, சீலாட் தற்காப்புக் கலை வீரர் இக்பால் அப்துல் ரகுமான் சிங்கப்பூருக்கு முதல் தங்கத்தை வென்று தந்திருந்தார்.