தவறுதலாக தமக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 நிதியை இணையவழி சூதாட்டக் கூடங்களில் பறக்கவிட்டார் ஜப்பானிய ஆடவர் ஒருவர்.
கொவிட்-19 உதவி நிதியாக 463 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருந்த 46.3 மில்லியன் யென் (497,771 சிங்கப்பூர் வெள்ளி) பணம், 24 வயது ஆடவரின் வங்கிக் கணக்குக்குச் சென்றது.
ஜப்பானின் மேற்கு வட்டாரத்தில் உள்ள ஆபு எனும் ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது.
தவறை உணர்ந்த அதிகாரிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஆடவரைத் தொடர்பு கொள்ள படாதபாடு பட்டனர்.
அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவர் எங்குபோனார் என்று தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் தங்களுடன் வந்து மகனிடம் பேசி உதவி செய்யும்படி அவரது தாயாரை அதிகாரிகள் அழைத்தனர்.
ஆனால் அதுவும் பலிக்கவில்லை.
அதனால் வேறு வழி இல்லாமல் ஆடவருக்கு எதிராக ஊரின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதற்குப் பின்னர்தான் வழிக்கு வந்தார் அந்த இளைஞர்.
பணத்தைத் திரும்பத் தர அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறுகச் சிறுகவாவது பணத்தைத் தருகிறேன் என்று ஆடவர் அடித்துக் கூறுவதாக அவரது வழக்கறிஞர் சொன்னார்.
ஏனென்றால் கிடைத்த பணத்தை இணைய சூதாட்டக் கூடத்தில் விட்ட ஆடவரிடம் இப்போது அந்த அளவுக்குப் பணம் இல்லையாம்.
ஆனால் ஆபு ஊர் மக்களும் அதிகாரிகளும் அவரை நம்பத் தயாராக இல்லை.
அதனால் இளைஞருக்கு எதிராகத் தொடுத்த வழக்கை அவர்கள் கைவிட தயாராக இல்லை.
இந்நிலையில் பண உதவி கிடைக்காமல் போன ஏழைக் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறினர்.