புதுமணத் தம்பதியரான ஆதியும் நிக்கி கல்ராணியும் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை உற்சாகத்துடன் தொடங்கி உள்ளனர்.
இவர்களது திருமண நாளன்றுதான் நிக்கியின் மூத்த சகோதரி சஞ்சனா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதனால் நிக்கியின் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் காண முடிகிறது.
"முதன்முதலாக 'யாகாவாராயினும் நா காக்க' படப்பிடிப்பில்தான் நிக்கியைச் சந்தித்தேன். நான் அதிகம் பேசாத ரகம். அவரோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்.
"ஆனால், அந்தப் பேச்செல்லாம் மற்றவர்கள் மீதான கரிசனமாகவே இருக்கும். வம்பு பேச மாட்டார். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
"படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒருவரையொருவர் அக்கறையுடன் விசாரித்துக்கொள்வோம். இதில் ஆச்சரியமான திருப்பமாக, திடீரென என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலேயே குடிபுகுந்தார் நிக்கி. அதன் பிறகு நட்பு மேலும் பலப்பட்டது. எட்டு ஆண்டுகளாக ஒருவித ஈர்ப்பு நிலவி வந்தது. காதலிப்பதாக ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவே இல்லை. ஆனால் எல்லாமே இயல்பாக நடந்து, இதோ இப்போது தம்பதிகளாக மாறிவிட்டோம்.
"என் பெற்றோருக்கு நிக்கியை மிகவும் பிடிக்கும். அதனால் அக்கறையுடன் அவரை கவனித்துக்கொள்கிறார்கள்.
"ஒரு பெண்ணின் மனதில் மகிழ்ச்சி இருந்தால் அது அவரது ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும். நிக்கியிடம் அதைக்காண்கிறேன். மொத்தத்தில் புது வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது," என்கிறார் ஆதி.