சண்டிகர்: கொலை வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து (படம்) சிறையில் தூக்கமின்றித் தவித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 1987ஆம் ஆண்டு சாலையில் நடந்த சண்டையில் ஒருவரை அடித்துக் கொன்றதாக சித்து மீது வழக்குப் பதிவானது.
இந்த வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 20ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் கைதிகளுக்கான வெள்ளை நிற ஆடையில் காணப்படும் சித்துவுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் பத்தாம் எண் கொண்ட சிறை அறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
"சித்துவுக்கு கைதி எண் 137,683 ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மொத்தம் நான்கு கைதிகள் உள்ளனர்.
"சிறையில் அடைக்கப்படும் முன்பாகவே அவர் இரவு உணவை சாப்பிட்டுவிட்டார். அதனால், சிறையில் இரவு அளித்த உணவை அவர் சாப்பிடவில்லை. மேலும், இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்," என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனி சிறைக்கைதி என்கிற வகையில் சித்து தினமும் காலை 5.30 மணிக்கு எழ வேண்டும். தண்டனைக் கைதிகள் தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதற்கு நாள்தோறும் ரூ.30 முதல் ரூ.90 வரை ஊதியம் வழங்கப்படும்.