பெங்களூரு: கர்நாடகாவில் நீடித்து வரும் கனமழையை அடுத்து அங்கு ஆறு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் அண்மைய சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் பரவலாகப் பெய்து வரும் மழையால், உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக அங்கு மழைப்பொழிவு குறைந்திருந்த நிலையில், அடுத்த நான்கு நாள்களுக்கு ஆறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தகுந்த காரணங்கள் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
மாநிலம் முழுவதும் பல லட்சம் ஹெக்டர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தாவணகெரே பகுதியில் நீடித்து வரும் கனமழையால் சுமார் இருநூறு வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குடகு, மைசூரு, ஷிமோகா, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருவதால் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதன் எதிரொலியாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோடைக் காலத்தில் அணைகள் நிரம்புவது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.