அடுத்த கொவிட்-19 அலையை இந்தோனீசியாவால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அதன் சுகாதார அமைச்சர் புடி குணாடி சடிக்கின் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
'பிஏ.4', 'பிஏ.5' ஓமிக்ரான் துணைத் திரிபுகளால் இந்தக் கிருமி அலை ஏற்படலாம் என்றாலும் இந்தோனீசியாவில் பெரும்பாலானோர் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு அதற்கு எதிரான எதிர்ப்புசக்தியைக் கொண்டுள்ளனர் அல்லது கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் நிகழக்கூடிய அடுத்த கிருமி அலை தொடர்பில் அவர், "இது 'டெல்டா', 'ஓமிக்ரான்' அலைகளைவிட மிதமானதாக இருக்கும் என்று ஆதாரங்களின் அடிப்படையில் நான் உறுதியாக நம்புகிறேன்," என்று 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'பிஏ.4', 'பிஏ.5' திரிபுகள், தொடக்கத்தில் ஏற்பட்ட ஓமிக்ரான் அலையைக் காட்டிலும் மிதமான அளவில் உச்சத்தைத் தொட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இந்தோனீசியா-சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டிலும் பின்னர் அமைச்சர் பேசியிருந்தார்.
அடிப்படைப் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்பட திருத்தியமைக்கப்பட்ட இந்தோனீசியாவின் சுகாதாரப் பராமரிப்பு முறை குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
"நமது எண்ணப் போக்கை மாற்றிக்கொள்வது அவசியம். உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு குணமடைவதில் கவனம் செலுத்துவதைவிட உடல்நலத்துடன் இருப்பதில் கவனம் தேவை," என்றார் திரு புடி.
அவருடன் கலந்துரையாடல் அங்கத்தில் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் இடம்பெற்றிருந்தார்.
சுகாதாரச் செயலிகள் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது உள்பட, கொள்ளைநோயைச் சமாளிக்க சிங்கப்பூர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து அவர் பேசினார்.
தற்போது 'மூத்தோர் சுனாமி' அலையை சிங்கப்பூர் சந்தித்து வருவதாகக் கூறிய அவர், அறுவரில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவர் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை நான்கில் ஒருவர் என்றாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு குடும்ப மருத்துவர் அல்லது தனியார் மருத்துவர் என்ற பிரிவினர், பொதுச் சுகாதார அமைப்புமுறையின் ஓர் அங்கமாக்கப்பட்டது முக்கியமானதொரு கொள்கை மாற்றம் என்றார் அவர்.