துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று அறிவித்த $1.5 பில்லியன் ஆதரவு தொகுப்புத் திட்டத்தின்கீழ், அரசாங்கம் மூன்று முக்கிய தரப்பினருக்கு உதவ முற்படுகின்றது. எல்லாக் குடும்பங்களுக்கும் தனி நபர்களுக்கும் சிறு வர்த்தகங்களுக்கும் அரசாங்கம் ஒரு சில முக்கியத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளது. இந்தப் புதிய உதவிகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து வந்தது தமிழ் முரசு.
கிராப் வாகன ஓட்டுநர் அருள் ஹிலரி, 63, "அரசாங்கம் இம்மாதிரியான தொகை யை நமக்குத் தருவது எனக்கும் சக வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
"முன்பிருந்தே வெவ்வேறு வழிகளில் நமக்கு உதவிவரும் இந்த அரசாங்கத் திட்டங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்றார்.
சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர்-மலேசிய எல்லை போன்றவை திறந்துவைக்கப்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு பிரச்சினைகள் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என எண்ணும் அருள், தம்மைப் போன்ற ஓட்டுநர்களின் நிலைமை நிச்சயம் முன்னேற்றம் அடையும் என நம்புகிறார்.
"ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு வெறும் $300 பொருள் சேவை வரித் தொகை, வீட்டு அத்தியாவசியத் தேவை சேவைகளுக்கு $100 என தந்தால் போதாது. ஒவ்வொரு மாதமும், குறிப்பாக குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு, நிதி உதவி அளித்தால் இன்னும் நிலையான தீர்வாக இருக்கலாம்," என்கிறார் மெக்டானல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஜமினா பானு, 43.
விநியோக ஓட்டுநராகப் பணிபுரி
பவர்கள் பெரும்பாலும் தினமும் $150 வருமானம் ஈட்டுவார்கள் என தம் சொந்த அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொண்டார் கேப்ரியல் பட்டிஸ்டுட்டா, 20.
"இத்தொகை பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதை மறுக்கவில்லையென்றாலும் கிராப் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு நாம் கூடுதலாக சில மணி நேரம் பணிபுரியும்போது அவை நமக்குத் தரும் ஊக்கத்தொகை 150 வெள்ளியைவிட அதிகம் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். ஆகையால், இத்தொகை எந்த அளவிற்கு உதவும் என்பது ஒரு கேள்விக்குறிதான் என அவர் கருதுகிறார்.
'லொம்பா த குர்கா பிஸ்ட்ரோ' எனும் சிறு உணவகத்தின் உரிமையாளரான அனுஷ்கா ரணா, 56, "அரசாங்கம் சிறு வர்த்தகங்களுக்கு செய்யும் நிதி உதவி நம் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
"இத்தொகையைக் கொண்டு என்னால் மக்களுக்கு அதிகம் தெரிந்த இடத்தில் உணவகத்தைத் திறந்து என் வர்த்தகத்தில் முன்னேற்றத்தைக் காணமுடியும்," என்றார்.
புக்கிட் தீமா கடைத்தொகுதியின் நான்காம் மாடியில் துணைப்பாட நிலையங்கள், பணிப்பெண்களுக்கான வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு அருகே இருக்கும் தமது உணவகம், முதலாம் மாடிக்குச் சென்றால் மற்ற உணவகங்களோடு சேர்ந்திருக்கலாம் எனக் கூறிய அவர், அவ்வாறு செய்தால் வாடிக்கையாளர்கள் தமது உணவகத்துக்கு வரும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் என்றார்.
சிறு விநியோக வர்த்தக உரிமையாளரான லுக்கஸ் இங்கரம், 57, தனியாளாக நின்று வர்த்தகத்தை நடத்துவதால் ஊழியர்களுக்காகக் தரப்படும் நிதி உதவி தமக்கு அவ்வளவு பொருந்தாது என்றும் இருப்பினும் பிற்காலத்தில் வர்த்தகத்தை விரிவடையச் செய்ய விரும்பினால் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பெருமளவில் உதவக்கூடும் என்றும் கூறினார்.