பெங்களூரு: தாய்மை அடைந்த தனது செல்லப்பிராணிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தார்.
பாகல்கோட்டை மாவட்டம் குலிதகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் ஆசையாக வளர்த்து வரும் ஒரு நாய் அண்மையில் கர்ப்பம் தரித்தது.
இதையறிந்தது மகிழ்ச்சி அடைந்த ஜோதி, சிக்கவ்வா என்று பெயர் சூட்டப்பட்ட செல்லப் பிராணிக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தார். இதையடுத்து தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்த ஜோதி, தனது உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் என அனைவரையும் அந்த நிகழ்வுக்கு அழைத்தார்.
வளைகாப்பு நிகழ்வு அன்று தனது செல்லப்பிராணியைக் குளிப்பாட்டி, நெற்றியில் குங்குமம், சந்தனமிட்டு அழகுபடுத்தினார். மேலும், பச்சை நிறத்தில் வளையல்கள், சேலை அணிவித்து மகிழ்ந்த அவர், ஆரத்தி எடுத்து வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்தி முடித்தார்.
நாய்க்குப் பிடித்த உணவுகள், பழங்கள் வழங்கப்பட்டன.
சிக்கவ்வா நாய்க்கு நடந்த விழா தொடர்பான காணொளிப் பதிவுகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூன்று ஆண், மூன்று பெண் என சிக்கவ்வா ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது.