கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தாய்க்கு மட்டுமல்லாது சேயின் வளர்ச்சியையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதால் ஆரோக்கியமற்ற அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் அதிகப்படியான உண்பதைத் தவிர்த்து, சில மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் பொட்டேசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளடங்கியது. பேறு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழங்களைச் சாப்பிடுவது உதவியாக இருக்கும். வைட்டமின் பி6 குமட்டல் மற்றும்
வாந்தியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பேறு காலத்தின் ஆரம்ப நிலையில் இந்தப்
பிரச்சினைகள் தலைதூக்கும்.
எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, அன்னாசி, ஆரஞ்சு போன்ற
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் சி அவசியம். சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் செரிமானத்தை மேம்படுத்தவும், பேறு காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் உடல்
உபாதைகளைப் போக்கவும் உதவும்.
அவகாடோ பழத்தில் அதிக 'போலேட்' உள்ளது. வைட்டமின் சி, பி, கே, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டேசியம் போன்ற ஊட்டச்சத்துகளும் அதிகம் உள்ளன. மேலும் அவகாடோ பழத்தில் உள்ள பொட்டேசியம் பேறு காலத்தில் காலில் ஏற்படும் தசைப் பிடிப்புகளை கட்டுப்படுத்த உதவும். பொதுவாக பொட்டேசியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு காரணமாக காலில் பிடிப்புகள் ஏற்படலாம். இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் இந்த குறைபாட்டை நீக்கிலாம். குமட்டலும் நிற்கும்.
நார்ச்சத்துள்ள ஆப்பிள் பழம் அதிக அளவு வைட்டமின் சி கொண்டுள்ளது. வைட்டமின் ஏ, பொட்டேசியம் மற்றும் பெக்டின் ஆகியவையும் உள்ளன. பெக்டின் என்பது ஆப்பிளில் காணப்படும் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது
குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை
ஊக்குவிக்கும். ஆப்பிளில் இருக்கும் அதிக சத்துகளைப் பெறுவதற்கு அதனை தோலுடன் சாப்பிட வேண்டும்.
தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, பி6, மெக்னீசியம், பொட்டேசியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் தாதுக்களும் நார்ச்சத்துகளும் உள்ளன. பேறு காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கை, கால்களில் உண்டாகும் வீக்கம் போன்றவற்றை தணிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. தசைப்
பிடிப்புகளையும் போக்க உதவும்.
முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, போலேட் மற்றும் நார்ச்சத்துகள், தாதுக்கள் தாய், சேய் இருவரின் தேவை
களைப் பூர்த்தி செய்யும். இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கக்கூடியது.
உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை
வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பொட்டேசியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு,
வைட்டமின் சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும் அதில் உள்ளன.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும். பேறு காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளான மலச்சிக்கல் மற்றும் மூல நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.
தக்காளியில் வைட்டமின் ஏ
மற்றும் சி அதிகம் உள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு
அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. தக்காளியை பேறு காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மை
களையும் வழங்கக்கூடியது. தக்காளியை அளவோடு பயன்படுத்துவதன் மூலம் அனைத்து ஆரோக்கிய
நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.
கத்தரிக்காயும் பேறு காலத்தில் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது. இருப்பினும், அளவோடு சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது. ஏனெனில் இதில் வைட்டமின் இ, ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன.