சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக சிரமம் தராத வகையில் மேம்பட்ட சிகிச்சை முறை ஒன்று தற்போது சோதிக்கப்படுகிறது.
சிறுநீரகம் செயலிழந்தால் 'டயாலிசிஸ்' எனப்படும் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு முன்னதாக நோயாளிகள் ஓர் அறுவைச் சிகிச்சைக்குச் செல்லவேண்டும்.
நோயாளியின் ரத்தத்தை செயற்கையான சிறுநீரகம் போன்ற கருவி சுத்திகரிப்பதற்கு ஏதுவாக அவரது உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து அனுப்ப, கையின் மேற்பகுதியில் ஓர் இடத்தில் துளையிட நேரிடும்.
நரம்பையும் ரத்தக் குழாயையும் இணைத்து அதன் வழியே ரத்தம் செல்லும்படி அமைக்க இது உதவும். ஆனால் இதற்கு பயந்துகொண்டு நோயாளிகள் சிலர் 'டயாலிசிஸ்' சிகிச்சையை நிராகரிப்பதுண்டு.
புதிய சிகிச்சை முறையில் ஊசிகளைச் செலுத்தி, 'அல்ட்ரா சவுண்ட்' எனப்படும் மிகைஒலி முறையில் நரம்பையும் ரத்தக் குழாயையும் இணைக்கலாம்.
அல்லது காந்தங்கள் பொருத்தப்பட்ட ஊசிகளை நரம்பிலும் ரத்தக் குழாயிலும் செலுத்தி பின்னர் அவற்றை இணைக்கலாம் என்று கூறப்பட்டது.
பாரம்பரிய அறுவைச் சிகிச்சை முறையில் இந்த இணைப்பிற்கு 45 முதல் 90 நிமிடங்கள் பிடிக்கும். புதிய முறையில் 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இது சாத்தியம். அத்துடன் இந்த முறையில் அறுவைச் சிகிச்சைத் தழும்பும் ஏற்படாது என்பது சிறப்பு.