சிராங்கூனில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் நேற்று முன்தினம் தண்ணீர்க் கசிவு ஏற்பட்டதால் அங்குள்ள சில கடைகள் மூடப்பட்டிருந்தன. கசிவு சரிசெய்யப்பட்டவுடன் அக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்றுக் காலை 'ஃபுட் ரிபப்ளிக்' உணவுக்கூடத்துக்கு எதிரே உள்ள அப்பகுதிக்குச் சென்று நிலவரத்தைக் கண்டறிந்தது.
முதல் தளத்தில் தண்ணீர்க் கசிவு ஏற்பட்டது குறித்து சனிக்கிழமை மாலை 5.55 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக நெக்ஸ் கடைத்தொகுதி பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அன்றிரவு 11 மணிக்குள் இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. எனினும், மீதமிருந்த தண்ணீர் தொடர்ந்து கசிந்ததால் கீழ்த்தளங்களில் உள்ள சில கடைகள் பாதிக்கப்பட்டதாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.
"எங்களுடைய வாடகைதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக, பிரச்சினை முழுமையாக சரிசெய்யப்படும்வரை செயல்பாடுகளை நிறுத்திவைக்குமாறு பாதிக்கப்பட்ட வாடகைதாரர்களிடம் தெரியப்படுத்தினோம்," என்றார் அவர்.
நெக்ஸ் கடைத்தொகுதியின் இரண்டாம் கீழ்த்தளத்தில் உள்ள 'பெஸோ' கடையில் வேலை செய்யும் ஊழியர், தண்ணீர்க் கசிவு காரணமாக நேற்று முன்தினம் கடை மூடப்பட்டதாகக் கூறினார்.
"காலை 8.15 மணிக்கு நான் வேலைக்கு வந்தபோது, என்னால் கடைக்குள் நுழைய முடியவில்லை. கடையைத் திறப்பது ஆபத்தானது என்று கடைத்தொகுதி நிர்வாகம் கூறியது," என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊழியர்.
"நல்ல வேளையாக, கடைக்குள் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இன்று (நேற்று) கடையைத் திறக்க முடிந்தது," என்றார் அவர்.